சேலம், திருவள்ளூரில் மேலும் 2 தனியார் மருத்துவக் கல்லூரிகள்!
சென்னை: தமிழகத்தில் இந்தக் கல்வியாண்டில் மேலும் இரு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அகிய இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கும் என்று தெரிகிறது.
சேலத்தில் ஸ்ரீ அன்னபூரணி மருத்துவக் கல்லூரி, சென்னை அருகே திருவள்ளூரில் டி.டி.நாயுடு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை அகில இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் குழுவினர் சமீபத்தில் ஆய்வு செய்தனர்.
சேலம் ஸ்ரீ விநாயகா மிஷன் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்படும் ஸ்ரீ அன்னபூரணி மருத்துவக் கல்லூரி, 150 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க அனுமதி கோரியுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட இந்தக் கல்லூரி அனுமதி கோரியுள்ளது. இதனால் இந்தக் கல்லூரியிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும்.
அதேபோல திருவள்ளூர் டி.டி.நாயுடு கல்லூரியும் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு அனுமதி கோரியுள்ளது. இங்கும் அரசு ஒதுக்கீட்டுக்கு 97 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
அதே போல சென்னை திருவேற்காட்டில் உள்ள ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியும், வண்டலூர் அருகே தாகூர் மருத்துவக் கல்லூரியும் ஏற்கனவே தலா 150 எம்.பி.பி.எஸ். இடங்களில் நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர்களைச் சேர்க்க அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதியை கோரியுள்ளன.
இந்தக் கல்லூரிகள் மூலமும் அரசு ஒதுக்கீட்டுக்கு தலா 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும்.