பேச்சுவார்த்தை தோல்வி-திட்டமிட்டபடி இன்று முதல் என்எல்சி ஊழியர்கள் ஸ்டிரைக்
என்.எல்.சி.யில் பணியாற்றும் 15 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு முதல் புதிய ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும். இதற்கான ஒப்பந்தம் போடுவதில் கால தாமதம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக என்எல்சி நிர்வாகத்துடன், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் பாட்டாளி தொழிற்சங்கம் ஆகியவை பேச்சு நடத்தின. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனால் கடந்த 31-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக என்.எல்.சி. நிறுவனத்திடம் தொழிற்சங்கங்கள் நோட்டீஸ் வழங்கின. அதன்படி கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் இறுதிக் கட்டமாகநேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் பாட்டாளி தொழிற்சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதையடுத்து அறிவித்தபடி இன்று நள்ளிரவு முதல் நிரந்தரத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதிக்கின்றனர். இவர்களுக்கு தற்காலிக தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எனவே ஒட்டுமொத்த தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் மின் உற்பத்தி மொத்தமாக பாதிக்கப்பட்டு தென் மாநிலங்கள் அனைத்திலும் பெரும் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
ஸ்டிரைக் தொடங்கவுள்ளதால் 2000க்கும் மேற்பட்ட போலீஸார் சுரங்க நுழைவாயில்களில் குவிக்கப்பட்டுள்ளனர். நிர்வாக அலுவலகம், மின்உற்பத்திப் பிரிவுகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.