நித்தியானந்தா ஆசிரமம் போக விரும்பு புகார்கொடுத்த சகோதரிகள்-தந்தை புகார்
சென்னை: நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு மீண்டும் போக தங்களை அனுமதிக்கக் கோரி குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளனர். சாமியாரின் பெண் சீடர்கள் 2 பேர் நேற்று போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.
ஆனால் தனது சொத்தை அபகரிக்க தனது தம்பி செய்யும் சதியே இது என்று அந்த சகோதரிகளின் தந்தை புகார் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையை சேர்ந்தவர்கள் கிருஷ்ணேஸ்வரி என்ற நித்ய பிரீத்தானந்தா (29) மற்றும் சித்ரேஸ்வரி என்ற நித்ய பிராவனானந்தா (28). இவர்கள் இருவரும் சகோதரிகள், எம்.ஏ. பட்டதாரிகள். பிஎச்டி ஆய்வுப் படிப்பில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் நித்தியானந்தா சாமியாரின் சீடர்கள் ஆகும்.
இவர்கள் நேற்று சென்னை நகர போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அதில்,
சகோதரிகளான நாங்கள் இருவரும் எம்.ஏ. பொருளாதாரம் படித்துவிட்டு தறபோது பி.எச்டி. படித்து வருகிறோம். சென்னையில் உள்ள எங்கள் சித்தப்பா விஸ்ரூபானந்தாவின் வீட்டில் தங்கியுள்ளோம்.
நாங்கள் பெங்களூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் பி.எஸ்பி. ஹீலர் நித்யானந்தம் போன்ற வகுப்புகளில் சேர்ந்து படித்து தேர்ச்சி பெற்றுள்ளோம். அந்த ஆசிரமத்திலேயே தங்கி நாங்கள் பிரமச்சாரிகளாக ஆன்மிக பணிபுரிந்து கொண்டிருந்தோம்.
எங்களது பெற்றோரிடம் அனுமதி பெற்றுதான் நாங்கள் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் தங்கியிருந்தோம். எங்கள் தந்தைக்கு நித்யானந்தா மீது இருந்த மரியாதையால் அவர் அடிக்கடி ஆசிரமத்திற்கு வந்து எங்களை பார்த்துவிட்டு செல்வார். கடந்த மார்ச் மாதம் நித்யானந்தா மீது உண்மைக்கு புறம்பான சில குற்றச்சாட்டுகள் வந்ததையடுத்து எங்கள் தந்தை எங்களை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார்.
எங்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க எங்கள் பெற்றோர்கள் முயற்சித்தார்கள். எங்களுக்கு திருமணத்தில் நாட்டமில்லை. எனவே, எங்கள் பெற்றோரின் தொல்லையை தாங்கமுடியாமல் நாங்கள் எங்கள் சித்தப்பா வீட்டுக்கு வந்துவிட்டோம்.
நாங்கள் மீண்டும் நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு செல்ல முடிவு செய்தோம். ஆனால், அதற்கு எங்கள் பெற்றோர் சம்மதிக்கவில்லை. அவர்களை மீறி நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு சென்றால் அவர் எங்களை கடத்தி சென்றுவிட்டார் என்று போலீசில் புகார் கொடுக்கப்போவதாக எங்கள் பெற்றோர் மிரட்டுகிறார்கள்.
நாங்கள் எந்த தூண்டுதலுமின்றி சுய நினைவோடுதான் ஆன்மிக பணி ஆற்றுவதற்காக மீண்டும் நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு செல்கிறோம். ஒருவேளை இதனால் எங்கள் பெற்றோர் நித்யானந்தா மீது பொய்யான புகார் கொடுத்தால் நடவடிக்கையும் எதுவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றுகூறியிருந்தனர்.
இதையடுத்து போலீஸார் இரு சகோதரிகளுக்கும் பல அறிவுரைகளை வழங்கினர். ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா இருக்கும் வீடியோ உண்மைதான். இதுகுறித்து முறையான ஆதாரங்கள் உள்ளன. அதன் பேரில்தான் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறிப் பார்த்தனர். ஆனால் அதை அவர்கள் காதில் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை.
தந்தையின் புகார்
இந்த நிலையில் இரு பெண்களின் தந்தையான சிவபாலன் புதிய புகாரைக் கூறியுள்ளார்.
இதுதுகுறித்து அவர் கூறுகையில்,
தமிழக அரசின் கால்நடை துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்று உள்ளேன். எனக்கு 2 மகள்கள் மட்டுமே இருந்தனர். கிருஷ்னேஷ்வரி, சித்ரேஸ்வரி ஆகிய அவர்கள் இருவரும் நன்றாக படிப்பார்கள். அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன். இதற்காக அவர்கள் விரும்பிய பாடங்களை படிக்கவும் அனுமதி கொடுத்தேன். மகள்களின் நலனுக்காக ஏராளமான சொத்துக்களையும் சேர்த்து வைத்தேன்.
எனது ஓய்வூதிய பணத்தையும் வங்கிகளில் டெபாசிட் செய்து வைத்தேன். இந்த விவரங்கள் எனது உடன் பிறந்த தம்பியான கண்ணணுக்கு (விஸ்ரூபானந்தா) தெரியும்.
அவர் சென்னையில் மத்திய அரசு பணியில் இருக்கிறார். நித்தியானந்தாவுடன் அவருக்கு பழக்கம் உண்டு. ஒரு முறை ஊருக்கு வந்த போது எனது மகள்களிடம் நித்யானந்தா பற்றி பேசினார்.
மேலும் எனது மகள்களை நித்தியானந்தாவின் சீடர்களாக்கி அவர்களுக்கு வெளிநாட்டில் ஆசிரமம் அமைத்து தருவதாகவும், ஆசை வார்த்தை கூறினார்.
இதில் மயங்கி போன மகள்களை அவர் சென்னைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து பிடதி ஆசிரமத்தில் சேர்த்து விட்டார். நன்றாக படித்து என்னோடு பாசமாக பழகி வந்த மகள்கள் இதன் மூலம் என்னிடம் இருந்து பிரிக்கப்பட்டனர்.
ஆரம்பத்திலேயே இதை கண்டுகொள்ளாதது தான் எனக்கு வினையாக வந்து விட்டது. இப்போது அவர்கள் ஆசிரமமே கதி என்று இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? என்று நான் யோசித்த போது தான் அதன் பிறகு எனது குடும்பத்தில் நடந்த பல சம்பவங்கள் நினைவுக்கு வந்தது.
குறிப்பாக மகள்கள் இருவரும் ஆசிரமத்திற்கு சென்ற பின்பு எனது தம்பி என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்தார். சமீபத்தில் கூட ரூ. 5 லட்சத்து 40 ஆயிரம் உடனே வேண்டும் என்று நச்சரித்தார். அந்த பணத்தை இங்கிருந்து நான்தான் வங்கி மூலம் மெயில் டிரான்ஸ்பர் செய்து அனுப்பி வைத்தேன். இப்போது என் சொத்துக்களை குறி வைத்து கேட்டு வருகிறார்.
மகள்களுக்காக டெபாசிட் செய்த ஓய்வூதிய பணத்தையும் கேட்கிறார். அவருக்கும் 2 மகள்கள் உள்ளனர். அவர்களை நன்றாக படிக்க வைக்கும் தம்பி எனது மகள்களை என்னிடம் இருந்து பிரித்து சொத்துக்களை அபகரிக்க சூழ்ச்சி செய்கிறார்.
நித்தியானந்தா மீது புகார் கிளம்பி அவர் ஆசிரமத்தை விட்டு வெளியேறியதும் அங்கிருந்த என் மகள்கள் இருவரும் இங்கு வரவில்லை. அவர்கள் சென்னையில் என் தம்பி வீட்டில் தான் இருந்தனர்.
இப்போது அவர்கள் இங்கு வந்ததாகவும், நான் அவர்களை கட்டாய படுத்தி திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததாகவும், வேண்டும் என்றே பொய் புகார் கொடுத்துள்ளனர். விரைவில் எனது வக்கீல் மூலம் இதற்கு பதில் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.