'பந்த்': வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை-அரசு

பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 5ம் தேதி தேசிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் உள்ளிட்ட சில கட்சிகளும் அதே நாளில் மாநில அளவில் பந்த் அறிவித்துள்ளன.
இது குறித்து மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
வேலைநிறுத்தத்தின் போது மக்களின் அன்றாட வாழ்க்கை, போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகியவை பராமரிக்கப்பட வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டது.
பொது மக்களுக்கோ மற்றும் பொதுச் சொத்துக்கோ சேதம் விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தியாவசியத் தேவைகளான தொலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு, குடிநீர் வழங்கல், பால் வினியோகம், செய்தித்தாள், மருத்துவமனைகள், தீயணைப்புத்துறை செயல்பாடுகள் தடையி்ன்றி பராமரிக்கப்பட வேண்டும் என்றும்
முக்கிய கட்டமைப்புகளான மின் நிலையங்கள், துணை மின் நிலையங்கள், அரசுக் கட்டடங்கள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாலங்கள், எண்ணெய் கிடங்குகள், ரயில்வே மேம்பாலங்கள் ஆகியவற்றுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் தங்கு தடையின்றி செயல்படவும், போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், பணிக்குச் செல்பவர்களை தடுப்பவர்கள், வன்முறைச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்கள், பஸ் பணிமனைகள், நீதிமன்றங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications