மாணவர்கள் தாக்குதல்-செனை மின்சார ரயில் டிரைவர்கள் போராட்டம்
சென்னை: ரயில் டிரைவரை தாக்கிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்ட்ரல் யில் நிலையத்தில் ரயில் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் புறநகர் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாயின.
நேற்று ஆவடி நெமிலிச்சேரி அருகே ரயில் டிரைவர் ஒருவர் மாணவர்களால் தாக்கப்பட்டார். இதையடுத்து இன்று காலை 8.45 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 15 ரயில் டிரைவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புறநகர் ரயில்கள் புறப்பட்டுச் செல்லும் பகுதியில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு டிரைவரை தாக்கிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கோஷங்களை எழுப்பினர்.
இதனால் புறநகர் ரயில்கள் புறப்படுவது தாமதமாயின. சுமார் 1 மணி நேரம் இந்த போராட்டம் நீடித்தது. உயர் அதிகாரிகள் ஓடிவந்து டிரைவர்களோடு சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் சென்ட்ரலிலிருந்து புறப்படும் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாகக் கிளம்பிச் சென்றன.