கலவரத்தைத் தூண்டும் பேச்சு-விஜயசாந்தி கைது-ஜாமீனில் விடுதலை
ஆந்திராவின் தெலுங்கானா பகுதியில் 12 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஜூலை 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்களிடம் விஜயசாந்தி பேசுகையில், தெலுங்கானாவுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை வெட்டிக் கொல்வேன், நான் தெலுங்கானா பெண், யாருக்கும் அஞ்ச மாட்டேன் என பேசியிருந்தார்.
இதையடுத்து கலவரத்தைத் தூண்டும் வகையில், பேசியதாக விஜயசாந்தி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து விஜயசாந்தி கைது செய்யப்படலாம் என பரபரப்பு உருவானது. பஞ்சாரா ஹில்ஸில் உள்ள அவரது வீட்டில் தொண்டர்கள் குவிந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை போலீஸார் விஜயசாந்தி வீட்டுக்கு வந்தனர்.
ஆனால் அவர்களை உள்ளே நுழைய விடாமல் தொண்டர்கள் தடுத்துப் போராடினர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் தள்ளுமுள்ளு நிலவியது. பின்னர் ஒரு வழியாக போலீஸார் உள்ளே நுழைந்து சோதனை போட்டனர். ஆனால் விஜயசாந்தி கிடைக்கவில்லை.
விஜயசாந்திக்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கட்சிக்காரர் ஒருவர் கூறினார்.மேலும், விஜயசாந்தி தானாகவே கோர்ட்டில் சரணடைவார் என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் இன்று விஜயசாந்தியை பஞ்சாரா ஹில்ஸ் போலீஸார் கைது செய்து ஹைதராபாத் சன்சல்குடா சிறையில் அடைத்தனர்.
அவர் மீது மதம், இனம் அடிப்படையில் பகலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், வகுப்புக் கலவரத்தை தூண்டுவது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை ஏற்ற நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. ஆனால், சிறையிலிருந்து வெளியேற மாட்டேன் என்று விஜய்சாந்தி உள்யேளே போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர் விரைவில் சிறையை விட்டு வெளியே வருவார் என்று தெரிகிறது.