கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் முதுகில் ரத்தம் தொடர்ந்து வந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம், சரவணபுரம் குமரவேல் என்பவரது மகள் பிரீத்தி (13), பிளமியா(13), சோழவல்லி பாலசுந்தரி (13) ஆகிய மூவரும் நெல்லிக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இவர்கர்கள் பள்ளிக்குச் சென்ற போது மூவரது முதுகிலும் ரத்தம் தானாக வழிந்து வந்ததாக கூறப்படுகின்றது. மேலும், கை, கால் வைக்கும் இடங்களில் ரத்தக்கறை படிந்ததாகவும் தகவல் பரவியது.
இதனையடுத்து, பள்ளி ஆசிரியை, மூன்று மாணவியரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதித்து பார்த்தார்.
மாணவி பிரீத்தி முதுகில் ரத்தம் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை, உடனடியாக மருத்துவமனை அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், கெட்ட ஆவியின் செயலால் தான் ரத்தம் வருவதாகக் கூறி மாணவியரை சாமியார்களிடமும், கிறிஸ்தவ பாதிரியார்களிடமும் அவர்களது பெற்றோர்கள் அழைத்துச் சென்று பரிகாரம் மற்றும் ஜெபம் செய்துள்ளனர்.
இந்த தகவல் அக்கம் பக்கத்து கிராமங்களுக்கும் பரவியதால் அந்த மாணவிகளைப் பார்க்க பலர் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.