எகிப்து வக்கீலுக்கு இந்திய இதயம் பொருத்தம்-சென்னையில் ஆபரேஷன்
சென்னை: எகிப்து நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞருக்கு சென்னை மருத்துவமனையில், இந்தியர் ஒருவரின் இருதயம் பொருத்தப்பட்டது.
இதுகுறித்து முகப்பேர் பிரான்டியர் லைப்லைன் கே.எம்.செரியன் இருதயக் கழக மருத்துவமனை டாக்டர்கள் சரவண கணேஷ், கணபதி, சைலேஷ் ஆகியோர் செய்தியாளர்களிடையே பேசுகையில்,
எகிப்து நாட்டை சேர்ந்த வக்கீல் முகமது இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்தார். அவரது நிலைமை மோசமாக இருந்தது. இதை தொடர்ந்து அவருக்கு மாற்று இருதயம் வேண்டி, உறுப்பு மாற்றுப் பதிவில் அவரது பெயரை பதிவு செய்து இருந்தோம். மேலும் தமிழக இறந்தோர் உடல் உறுப்பு மாற்று கண்காணிப்பாளர் டாக்டர் ஜே.அமலோர்பவநாதனுக்கும் தகவல் அனுப்பியிருந்தோம்.
இந்த நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த 51-வயது நிறைந்த ஒருவரின் இருதயத்தை தானம் செய்ய இருப்பதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது பெயரை நாங்கள் தற்போது தெரிவிக்க இயலாது. அவருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர்.
மாற்று இருதயத்திற்கு காத்திருப்போர் பட்டியலில் இந்த இருதயத்திற்கு ஏற்ற பயனாளிகளில் எந்த இந்தியரும் இல்லாததால் எகிப்து நாட்டை சேர்ந்த அவருக்கு மாற்று இருதயத்தை பொருத்த நாங்கள் முடிவு செய்தோம். இதை தொடர்ந்து கடந்த மாதம் 30-ந் தேதி மிக பத்திரமாக இருதயம் கொண்டு வரப்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். இன்னும் 10 நாட்களில் அவர் பூரண குணம் அடைவார் என்றனர்.