வருமான வரி ரெய்ட்: தனியார் பொறியில-மருத்துவ கல்லூரிகளில் ரூ.20 கோடி பறிமுதல்
சென்னை: தமிழகம் முழுவதும் தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் வருமான வரித் துறையினர் நேற்று நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.20 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தப் பணம் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட நன்கொடை என்று தெரிகிறது.
நன்கொடை வசூல், உரிய அனுமதி இல்லாமை, கூடுதல் கட்டணம், வரி ஏய்ப்பு ஆகிய புகார்களின் அடிப்படையில் தனியார் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சென்னை, ஆவடி, மதுரவாயல், மேற்கு தாம்பரம், கும்மிடிப்பூண்டி, மேல்மருவத்தூர், கோவை, கொடைக்கானல், ஆரணி உள்ளிட்ட இடங்களில் உள்ள 15க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இந்தச் சோதனைகள் நடந்தன.
அப்போது கணக்கில் வராத ரொக்கம் மற்றும் வங்கி வைப்புத் தொகையாக இருந்த வரி செலுத்தப்படாத பணம் என மொத்தம் ரூ. 20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
சோதனையின்போது சென்னைக்கு அருகில் உள்ள ஒரு பிரபல குழுமத்தின் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலகங்களில் இருந்து மட்டும் ரூ.10 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போல கோவையில் கல்வி நிறுவனத்தில் இருந்து ரூ. 10 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்ற கல்லூரிகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்தும் வருமான வரித்துறை விரைவில் தகவல் வெளியிடும்.
இந்தச் சோதனைகள் இரவும நீடித்தன. இன்றும் தொடர்வதாகத் தெரிகிறது.