சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை
சென்னை: சென்னையில் தி.நகர் ஜவுளிக் கடைக்குச் சொந்தமான ரூ. 81 லட்சம் வங்கி எதிரே துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது.
தியாகராய நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் இருந்து ரூ.81 லட்சம் பணத்தை கடை ஊழியர்கள் இன்று மதியம் பாதுகாப்புடன் காரில் வங்கிக்கு கொண்டு சென்றனர்.
மாம்பலம் மகாலட்சுமி தெருவில் உள்ள தனியார் வங்கி முன்பு காரை நிறுத்தி விட்டு பணப் பெட்டியுடன் கீழே இறங்கினர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் கடை ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டியதோடு கார் கண்ணாடியையும் இரும்புக் கம்பியால் உடைத்தது.
ஆனால், பணப் பெட்டியைத் தர ஊழியர்கள் மறுக்கவே அந்தக் கும்பல் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணப் பெட்டியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டது.
பட்டப் பகலில் ஜன நெரிசல் மிக்க பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாம்பலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் 4 வீடுகளில் கொள்ளை:
இதற்கிடையே சென்னை நீலாங்கரையில் அடுக்கு மாடிக்குடியிருப்பில் உள்ள 4 வீடுகளில் ஒரே நேரத்தில் கொள்ளை நடந்துள்ளது.
நீலாங்கரையை அருகே உள்ள சீரடி சாய்பாபா கோவில் சாலையில் ஸ்ரீசாய்கார்டன் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 50 வீடுகள் உள்ளன.
நேற்றிரவு இந்த அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்த கொள்ளை கும்பல் 4 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளையடித்தது.
இங்குள்ள ஒரு வீட்டில் பரங்கிமலை ஜோதி தியேட்டர் அதிபர் ராமலிங்கம் வசித்து வருகிறார். அவரது வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.2,000 பணம் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர்.
இதையடுத்து சந்தீப் என்பவரின் வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்து 2 செல்போன்களை திருடினர்.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பணியாற்றும் மைக் டக்ளஸ் என்பரின் வீட்டுக்குள் புகுந்து ரூ.10,000 பணத்தை கொள்ளையடித்தனர்.
அடுத்ததாக சாய் பிரசாத் என்பவரின் வீட்டில் புகுந்து பணத்தைத் திருடிச் சென்றனர்.
இது குறித்து நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.