எஸ்.ஐ.தேர்வில் குழப்பம்-200 பேர் வெளியேற்றப்பட்டதால் அமளி
சென்னை: சென்னையில் இன்று நடந்த சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான சான்றிதழ் பரிசோதனையின்போது, இளங்கலை பட்டப்படிப்பை முடிக்காமல் நேரடியாக திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்களை தேர்வு எழுத அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதுபோன்ற தகுதியுடன் வந்திருந்த 200 போலீசார் தேர்வு மையத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டனர் இதனால் பெரும் அமளி ஏற்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் 1095 சப்- இன்ஸ்பெக்டர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள். பட்டப்படிப்பை முடித்துவிட்டு போலீஸ்காரர்களாக பணியில் சேர்ந்தவர்களும் இந்த தேர்வை எழுதலாம். 20 சதவீத இடம் இவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பணியில் இருக்கும் போலீசாருக்கான சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. சென்னையில் திருமங்கலம் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு நடந்தது. 2500 போலீசார் தேர்வு மையத்துக்கு வந்திருந்தனர். சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 10-ம் வகுப்பு, பிளஸ்-2, பட்டப்படிப்பு சான்றிதழ்கள் வைத்திருப்பவர்கள் மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
இளங்கலை பட்டப்படிப்பை முடிக்காமல் நேரடியாக திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்களை தேர்வு எழுத அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதுபோன்ற தகுதியுடன் வந்திருந்த 200 போலீசார் தேர்வு மையத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டனர்.
இதனால் கனவுகளுடன் வந்த போலீசார் தேர்வு எழுத அனுமதிக்காததால் விரக்தி அடைந்தனர். அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது