தமிழக சட்டசபை தேர்தல்-6ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை
இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறுகையில்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் வைர விழா கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை டெல்லியில் கொண்டாடப்பட்டது. கடந்த 60 ஆண்டுகளில் இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த கண்காட்சி அதில் இடம் பெற்றது. இதேபோல் கண்காட்சி நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இந்த கண்காட்சி லலித்கலா அகாடமியில் வருகிற 6ம் தேதி தொடங்குகிறது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நவின் சாவ்லா தொடங்கி வைக்கிறார். ஜூலை 9ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது.
இந்தியாவில் இதுவரை நடைபெற்ற தேர்தல் பணிகள் குறித்த முக்கிய புகைப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்படும். வீடியோ விளக்கப்படமும் காண்பிக்கப்படும். கண்காட்சியை பார்வையிட கட்டணம் எதுவும் கிடையாது.
இக் கண்காட்சியை தொடர்ந்து 6ம் தேதி காலை 11 மணிக்கு சென்னையில் தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் தேர்தல் ஆணையாளர்கள் குரோஜி, சம்பத் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதில் மாவட்ட கலெக்டர்கள், மூத்த போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்குச்சாவடிகள் ஆய்வு செய்தல் உள்பட அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை பொது தேர்தலுக்கான ஆலோசனை நடத்தப்படுகிறது.
தமிழக சட்ட மேலவை தேர்தலை பொறுத்தவரை ஆசிரியர், பட்டதாரி தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. நவம்பர் 6ம் தேதிக்குள் பட்டதாரியாக தகுதி பெறுவோர், 3 வருடம் ஆசிரியர் பணி நிறைவு செய்பவர்கள் இதில் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் என்ற அடிப்படையில் பட்டியல் தயாராகிறது. நவம்பர் 2 அல்லது 3வது வாரத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
கேள்வி: சுதர்சனம் மறைவு தொடர்ந்து பூந்தமல்லி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா?
குப்தா: பொதுத் தேர்தல் வர ஒரு வருடத்திற்கும் குறைந்த காலம் உள்ள சூழ்நிலையில் இடைத்தேர்தல் நடத்தப்படுவதில்லை.
கேள்வி: தமிழ்நாட்டில் முன் கூட்டியே சட்டசபைக்கு பொதுத்தேர்தல் வருமா?
குப்தா: அதுபற்றி எனக்கு தெரியாது என்றார்.