அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு புதிய வரிச்சலுகை அறிமுகம்
டெல்லி: அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு புதிய வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், அடுத்த 3 மாதங்களில் இந்தியாவில் சமூகசேவைப் பணிகளுக்காக செலவிடப்படும் பணத்திற்கு, முழுமையான வரிவிலக்கு அளிக்கப்படும்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இந்திய வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பின் பெயரில் இத்திட்டத்தை மத்திய அரசின் வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை செயல்படுத்தவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் தாங்கள் பிறந்த ஊர்களில், கிராமங்களில் பள்ளிக்கூடங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், பிற அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். இதற்காக அவர்கள் செலவிடும் தொகைக்கு வரி விதிக்கப்படாது.
இந்த அமைப்பை தற்போது அமெரிக்காவில் பதிவு செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. விரைவில் பிற நாடுகளிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். குறிப்பாக இங்கிலாந்து, வளைகுடா நாடுகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.