உசிலம்பட்டியில் பயங்கரம்: நடுரோட்டில் வாலிபர் வெட்டிக்கொலை
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடு ரோட்டில் வைத்து வாலிபர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
விழுப்புரம் மீன் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் பவுன்ராஜ். சுய தொழில் செய்து வரும் இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
பவுன்ராஜ் தன் மகள் ரம்யாவை மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஹோட்டல் வைத்து நடத்தும் உதயகுமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். பவுன்ராஜின் மகன் ராஜாராம் உசிலம்பட்டியில் தங்கி மைத்துனருக்கு உதவியாக ஹோட்டலை கவனித்து வந்தார். ராஜாராமுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
ராஜாராம் தினமும் காலை 4 மணிக்கு எழுந்து வந்து ஹோட்டலை திறந்து காலை டிபனுக்கு தேவையானவற்றை செய்து வந்தார். மற்ற ஊழியர்கள் பணிக்கு வந்ததும் அவர் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் குளியல் அறை ஒன்றில் குளித்து விட்டு வருவது வழக்கம். அவரது தங்கை கணவர் உதயகுமார் காலை 11 மணிக்கு தான் ஹோட்டலுக்கு வருவார்.
இந்த நிலையில் வழக்கம் போல் இன்று காலை ஹோட்டலை திறந்து வைத்துவிட்டு 7.15 மணி அளவில் குளிப்பதற்காக சென்றுள்ளார் ராஜாராம். குளியலறை அருகே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர்கள் 2 பேர் அவரை நடுத்தெருவில் வைத்து அரிவாளால் வெட்டியுள்ளனர். பிறகு எந்தவித பயமும் இன்றி கொலையாளிகள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் நிலைய பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பெறும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடுரோட்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜாராமை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு பற்றி பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.