மேல்மருவத்தூரில் வருமான வரி சோதனை: பாஜக கண்டனம்
காஞ்சிபுரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் வருமான வரி சோதனை நசத்தப்பட்டதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த பீடம் நடத்தும் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள மற்றும் கல்வி நிறுவனங்களில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
மேலும் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெற முன்னாள் அகில இந்திய மருத்துவக் கல்வி கவுன்சின் தலைவர் கேதன் தேசாய்க்கு பல கோடி லஞ்சம் வழங்கியதாகவும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து நடந்த வருமான வரி சோதனையின்போது பங்காரு அடிகளார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரிடமும் அதிகாரிகள் 17 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் கே.டி.ராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்து மதத்தின் மூலமாக மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகின்ற ஆன்மிக இயக்கம் ஆதிபராசக்தி சித்தர் பீடம்.
இந்து இயக்கத்தின் மீது களங்கம் ஏற்படுத்தி அதன் மூலம் இந்து நம்பிக்கையை குலைக்க வேண்டும் என்ற சில இந்து விரோத சக்திகளின் தூண்டுதலால் இந்த வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது என்று கூறியுள்ளார்.