தமிழக பகுஜன் சமாஜ் தலைவர் செல்வப்பெருந்தகை திடீர் நீக்கம்!
மதுரை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக செயல்பட்டு வந்த செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. அந்தப் பொறுப்பில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி, பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏவுக்கு அக் கட்சியின் தமிழ் மாநில தலைவர் பதவி வழங்கினார் கட்சியின் தலைவரான உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி.
இந் நிலையில் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பகுஜன் சமாஜ் தேசிய செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சுரேஷ் மானே கூறியதாவது:
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக செயல்பட்டு வந்த செல்வப்பெருந்தகை கடந்த சில காலமாக கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். இது குறித்து அவருக்கு கட்சி மேலிடம் பல முறை எச்சரிக்கை விடுத்து வந்தது.
ஆனால், அவர் அதைப் பற்றி கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் கட்சி விரோத நவடிக்கைகளில் செயல்பட்டு வந்தார். எனவே அவரை தமிழக தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தமிழக தலைவராக ஆம்ஸ்ட்ராங் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.