மாயாவதிக்குப் பணமாலை போட மறுத்ததால் நீக்கப்பட்டாரா செல்வப் பெருந்தகை?
சென்னை: பகுஜன் ஜமாஜ் கட்சித் தலைவரும், உ.பி. முதல்வருமான மாயாவதிக்கு பண மாலை போட மறுத்ததால் தமிழ் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ நீக்கப்பட்டதாக அக்கட்சியின் மாநில மகளிர்அணித் தலைவியும், செல்வப் பெருந்தகையின் ஆதரவாளருமான சாந்தாஸ்ரீநிதி கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 2ம் கட்டத் தலைவராக இருந்து வந்தவர் செல்வம் என்கிற செல்வப் பெருந்தகை. அக்கட்சியின் சார்பில் எம்.எல்.ஏவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். திருமாவளவனுக்கு அடுத்த இடத்தில் இருந்து வந்த அவர் பின்னர் கட்சியை விட்டு விலகினார்.
சிறிது காலம் அமைதியாக ஒதுங்கியிருந்த அவரை அழைத்த பகுஜன் சமாஜ் கட்சி அவரை தமிழ் மாநிலத் தலைவராக அமர்த்தியது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியும் இக்கட்சியில் இணைந்தார். விடுதலைச் சிறுத்தைகளுக்கு மாற்றாக இதை உருவாக்க முயற்சிகளும் நடந்தன. ஆனால் தற்போது கட்சி கலகலத்துப் போய் விட்டது.
சிவகாமி தனித்து செயல்பட ஆரம்பித்துள்ளார். இப்போது செல்வத்தையும் நீக்கி விட்டனர். செல்வம் நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் மாநில மகளிர் அணித் தலைவி சாந்தா விவரித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த ஜனவரி 15-ந் தேதி நடைபெற்ற மாயாவதி பிறந்தநாளில் மாயாவதிக்கு பணமாலை போடுவதற்காக செல்வபெருந்தகையை அழைத்தனர். ஆனால் அவர் பணமாலை போடுவதற்கு மறுத்துவிட்டார்.
மேலும், தமிழர்களை திட்டிய தமிழக மாநில ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் மானேயை செல்வபெருந்தகை கண்டித்தார். இதனால் முரண்பாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கட்சி விரோத போக்கில் ஈடுபட்டதாக பழி சுமத்தப்பட்டு கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார் என்றார்.
பேட்டியின்போது உடன் இருந்த சென்னை மாநகராட்சி பகுஜன் சமாஜ் கட்சி கவுன்சிலர்கள் உமாசாசவி, வா.பிரபு ஆகியோர் கூறுகையில்,
இது நாள் வரை பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் சென்னை மாநகராட்சியின் 145-வது வட்ட கவுன்சிலராக பணியாற்றி வந்த நானும் (உமாசாசவி), அதே கட்சியின் சார்பில் 42-வது வட்ட கவுன்சிலராக பணியாற்றிய வா.பிரபுவும் கட்சியில் இருந்து விலகி கொள்கிறோம். சுயேச்சையாக கவுன்சிலர் பதவியில் தொடர்ந்து செயல்படுவோம். வெளிநாடு சென்றிருக்கும் தலைவர் செல்வபெருந்தகை நாடு திரும்பியதும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெறும் என்றனர்.












Click it and Unblock the Notifications