என்ஜீனியரிங் மாணவர் படுகொலை-8 வட மாநில மாணவர்கள் கைது
சென்னை: கமிஷன் பெறுவதில் ஏற்பட்ட தகராறில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த என்ஜீனியரிங் மாணவர் படுகொலைசெய்யப்பட்ட வழக்கில், 8 வட மாநில மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் படித்து வரும் வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்களது கல்லூரிகளில், தங்களது மாநிலங்களைச் சேர்ந்தவர்களை சேர்த்து விடுவதன் மூலம் பெருமளவில் கமிஷன் பெற்று வரும் கேவலமான நிலைமை நிலவி வருகிறது.
படிக்க வந்ததை விட்டு விட்டு இப்படி புரோக்கர் வேலையில் ஈடுபடுவதால் வட மாநில் மாணவர்களுக்குள் பெரும் மோதல்கள் மூண்டு வருகின்றன. இதை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் கண்டு கொள்வதில்லை. காரணம், அவர்களுக்கு பெரும் தொகையுடன் மாணவர்கள் இலகுவாக கிடைப்பதால்.
இந்த நிலையில் இந்த அவலமான செயல் ஒரு கொலையில் முடிந்துள்ளது. மதுரவாயலில் உள்ள புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்குச் சொந்தமான எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் பி.டெக் மூன்றாவது ஆண்டு படித்து வந்த நிர்பேஷ் சிங் குமார் என்ற ஜார்க்கண்ட் மாணவருக்கும், ஜேப்பியாரின் சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையே கமிஷன் தொகை தொடர்பாக மோதல் மூண்டது.
இதில் நிர்பேஷ் சிங் குமார் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைவழக்கை விசாரித்து வரும் போலீஸார் தற்போது சத்யபாமாவில் படித்து வரும் பொறியியல் மாணவர்களான பீகார் மாநிலத்தை சேர்ந்த சவுரப் சந்திரா (23), சஞ்சய்குமார் (22), விவேக் குமார் சிங் (23), ரஞ்சித்குமார் (22), ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த ரோகன் சின்கா (22), சாம்ராஜித் (22), பிரபாஷ்குமார் (23), ஆந்திராவை சேர்ந்த நிஷாந்த் சவுத்திரி (23) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
பீகாரைச் சேர்ந்த சுமன் என்ற மாணவர் தப்பி ஓடி விட்டார். அவருக்கு வலை விரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கைது தொடர்பாக போலீஸ் துணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் கூறுகையில்,
தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ரூ.10 ஆயிரத்துக்கு வீடு எடுத்துக்கொண்டு அதில் 20 பேருக்கு மேல் தங்குகிறார்கள். வீடுகளில் தங்கும் மாணவர்கள், கல்லூரி முதல்வரிடம் இருந்து கடிதம் வாங்கி வீட்டின் சொந்தக்காரரிடம் கொடுக்க வேண்டும். அந்த கடிதம் இல்லை என்றால், குறிப்பிட்ட மாணவர்களுக்கு வீடுகளை, உரிமையாளர்கள் கொடுக்க கூடாது.
வெளி மாநில மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். எனவே வீடுகளில் தங்கும் மாணவர்களுக்கு வீட்டின் சொந்தக்காரர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறி இருக்கிறோம்.
வட மாநில மாணவர்களை, சென்னை புறநகர் பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்த்து விட்டால் கமிஷன் பணம் கிடைக்கிறது என்பதற்காக, மாணவர்கள் தகராறில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளி மாநில மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்க உள்ளோம் என்றார்.