கோவையில் வேகமாக பரவுகிறது பன்றிக்காய்ச்சல் : 3 வயது சிறுவன் பாதிப்பு
கோவை: கோவையில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. 3 வயது சிறுவன் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளான்.
கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஏராளமானோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழக-கேரள எல்லை பகுதியில் உள்ள மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
கேரள எல்லைப்பகுதியில் தான் கோவை உள்ளது. கேரளாவில் இருந்து தினமும் ஏராளமானோர் கோவைக்கு வந்து செல்வதால் கோவையில் பன்றிக் காய்சல் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.
கேரளாவை சேர்ந்த சிண்ட் (18), வைஷ்ணவ் (18) ஆகியோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் 25 வயது நர்சும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கோவை வந்த 3 வயது சிறுவன் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.