மதுபாட்டிலில் அலுமினிய தகடு: விவசாயிக்கு 25 ஆயிரம் நஷ்ட ஈடு
நெல்லை: மதுபாட்டிலில் அலுமினிய தகடோடு விற்பனை செய்த மாவட்ட டாஸ்மக் நிர்வாகம், விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க நெல்லை நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.
ஆலங்குளம் தாலுகா அருணாச்சலபுரத்தில் உள்ள அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கிதுரை, விவசாயி, இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி அழகியபாண்டியபுரத்தில் உள்ள டாஸ்மக் கடையில் 268 ரூபாய் கொடுத்து, 4 குவாட்டர் பாட்டில்கள் வாங்கினார்.
மதுபானத்தை வீட்டிற்கு கொண்டு் சென்ற இசக்கிதுரை மூடியை திறந்த போது பாட்டினுள் அலுமினிய தகடு ஒன்று கிடந்துள்ளது. இதனால் அதி்ர்ச்சி அடைந்த அவர் அதை குடிக்கவில்லை. மற்ற பாட்டில்களும் மோசமாக இருக்கும் என நினைத்து அவற்றையும் பயன்படுத்தவில்லை.
மதுவை குடிக்க நினைத்து வாங்கிய தனக்கு ஏமாற்றமும், மன உளைச்சலும் ஏற்பட்டதாக கூறினார் இசக்கிதுரை, நெல்லை டாஸ்மக் மேலாளர், சென்னை டாஸ்மக் நிர்வாக இயக்குனர் மற்றும் மதுபான உரிமையாளர் மீது நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் ரூ. 1 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ராமசந்திரன், உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ஜெசிந்தா ஆகியோர் விவசாயி இசக்கிதுரைக்கு ரூ.20 ஆயிரம் நஷ்ட ஈடும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.