மகன், மகள் மீது முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு: நீதிபதி உத்தரவு
சென்னை: முதியவர் ஒருவர் தன் மகன்கள், மகள் மீது கொடுத்துள்ள புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆவடியில் உள்ள மேற்கு காந்தி நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (82). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
நான் ஒரு மூத்த இந்திய குடிமகன். எனக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அவர்கள் அனைவரும் என்னை விட்டு பிரிந்து வாழ்கின்றனர். நான் கொடுங்கையூரில் உள்ள ஆர்.வி. நகரில் சொத்து ஒன்று வாங்கினேன். எந்த பிரச்சனையும் இன்றி அதில் நெடு நாட்களாக வாழ்ந்து வந்தேன். என் மனைவியின் மறைவிற்கு பின் தனியாக வாழ்ந்து வந்தேன்.
நான் என் சொந்த பணத்தில் வாங்கிய அந்த சொத்தை கிருஷ்ணன் என்பவருக்கு விற்க ஏற்பாடு செய்தேன். இதைப் பற்றி என் மகன்கள் சாமந்தீஸ்வரன், குபேந்திரன், மகள் பிரபாவதி ஆகியோர் தெரிந்து கொண்டனர். இதனால், என்னை தந்தை என்றும் பாராமல் அடித்து இழுத்துக் கொண்டு போய் அரும்பாக்கத்தில் உள்ள எஸ்.வி. முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். என்னை கண்காணிக்க குண்டர்களையும் நியமித்தனர்.
இதோடு இல்லாமல் என்னிடம் இருந்த 30 சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டனர். சாமந்தீஸ்வரன் என் காசோலைகளை பறித்துக் கொண்டு, என் கையெழுத்தை போலியாக போட்டு எனது கணக்கில் இருந்த பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டார்.
இது குறித்து நான் கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். அந்த புகார் மனு கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடு்த்தபாடில்லை. என் பிள்ளைகளின் மிரட்டலும் குறைந்தபாடில்லை. அதனால் தான், செய்வதறியாது உயர்நீதிமன்றத்தை அனுகியுள்ளேன் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி சி.டி, செல்வம், முதியவரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கொடுங்கையூர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications