இந்தியா-பாக் பேச்சு தோல்வி!: கிருஷ்ணாவை அவமரியாதை செய்த குரேஷி!!

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிரச்சனைகள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியுறவுச் செயலாளர்கள் மட்டத்தில் பேச்சு நடத்தப்பட்டது.
இதையடுத்து எஸ்.எம். கிருஷ்ணா இஸ்லாமாபாத் சென்று அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷியுடன் பேச்சு நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப் பின் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்கள் சந்தித்தனர்.
அப்போது இரு தரப்பும் பேச்சுவார்த்தை திருப்தியாக இருப்பதாகக் கூறிவிட்டு பிரஸ் மீட்டை ஆரம்பித்தனர்.
ஆனால் அப்போது மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளையின் செயல்பாடுகளை குரேஷி கடுமையாக விமர்சித்தார். மும்பை தாக்குதலை ஐஎஸ்ஐ தான் நடத்தியது என்று பிள்ளை கூறுவது சரியல்ல என்ற குரேஷி, அவரை தீவிரவாதி ஹெட்லியுடன் ஒப்பிட்டும் பேசினார்.
இதையடுத்து தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கும் இரு அமைச்சர்களும் முரண்பாடாக பதில் தந்தனர்.
பின்னர் பிரஸ்மீட் முடிந்து இன்னொரு அறைக்குள் எஸ்.எம்.கிருஷ்ணா நுழைந்தவுடன், தனியாக நிருபர்களை சந்தித்த குரேஷி, பேச்சுவார்த்தை குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையி்ல், எஸ்.எம்.கிருஷ்ணா பேச்சுவார்த்தை முழு அளவில் தயாராக வரவில்லை. பேச்சுவார்த்தையின்போது காஷ்மீர் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றோம்.
ஆனால் இந்தியா ஒரு குறிப்பிட்ட பிரச்சனையையே (தீவிரவாதம்) திரும்பத், திரும்ப பேசிவருகிறது. நாங்களும் தான் தீவிரவாதத்தை பாதிக்கப்பட்டுள்ளோம்.
காஷ்மீர் விவகாரம் குறித்து பேசாமல் இருக்க முடியாது. அதை ஒதுக்கிவிட்டு பேச்சு நடத்துவது என்பது இயலாத காரியம்.
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது எஸ்.எம். கிருஷ்ணா டெல்லியில் இருந்து வந்த தொலைபேசியில் பேசிக் கொண்டயிருந்தார். அங்கிருந்து வந்த கட்டளையின்படி தனது நிலையை அவ்வப்போது மாறிக் கொண்டார். ஒரு மூத்த அமைச்சருக்கு இது அழகல்ல என்றார் குரேஷி.
அவரது இந்த அவமதிப்புப் பேச்சு இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
இந் நிலையில் பேச்சுவார்த்தை முழு அளவில் முடிவடையாத நிலையில் எஸ்.எம். கிருஷ்ணா பாதியிலேயே தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.
டெல்லியில் நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணா, குரேஷியுடன் பேச்சுவார்த்தையின்போது நான் தொலைபேசியில் இடையிடையே பேசினேன் என்பது தவறு. ஒருமுறை கூட நான் தொலைபேசியில் பேசவில்லை. குரேஷி ஏன் அப்படிக் கூறினார் என்று தெரியவில்லை.
பேச்சுவார்த்தைக்கு இந்தியத் தரப்பு முழு அளவில் தயாராகவே சென்றது. குரேஷிக்கு பதிலுக்கு பதில் தர நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி என்று சொல்ல முடியாது என்றார்.
பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பாகிஸ்தானில் நடந்த விவகாரம் குறித்து இன்றே கிருஷ்ணா விளக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications