'கோஷ்டிக் கலவரம்' எதிரொலி-ப.சிதம்பரம் பொதுக் கூட்டம் ஒத்திவைப்பு
சென்னை: கோஷ்டிக்கலவரம் காரணமாக,மத்தியஉள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துவோம் என கள்ளக்குறிச்சி காங்கிரஸார் அறிவித்ததால், அந்தப் பொதுக் கூட்டத்தையே காங்கிரஸ் கட்சி தள்ளி வைத்து விட்டது.
காங்கிரஸ் கோஷ்டிக் கலவரம் மகா கேவலமான நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. குழாயடிச் சண்டை போல ஊருக்கு ஊர், நகருக்கு நகர்,கிராமத்துக்குக் கிராமம் கோஷ்டிச் சண்டை முற்றி வருகிறது.
அப்பழுக்கற்ற தலைவர் கக்கன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதிலும் கோஷ்டிப் பூசல் புகுந்து அசிங்கமாக்கி வருகிறது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இக்கூட்டத்திற்கு சிதம்பரம் வரக் கூடாது என்று கோரி வாசன் கோஷ்டியினர் பிரச்சினை கிளப்பி வருகின்றனர். இதை ஒரு தீர்மானமாகவே நிறைவேற்றியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்தக் கூட்டத்தையே தள்ளி வைத்து விட்டது காங்கிரஸ் கட்சி.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கை:
கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஜுலை 18-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க இயலாத காரணத்தினால் விழுப்புரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.சிவராஜ் எம்.எல்.ஏ.வின் வேண்டுகோளை ஏற்று பொதுக்கூட்டம் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்படுகிறது.
மேற்படி, மாற்றி அறிவிக்கப்படுகின்ற பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகிய நானும் கலந்து கொள்வோம் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன். தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சருக்கு சொந்த மாநில காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பாதுகாப்பு இல்லை என்பது கவலைக்குரிய விஷயம்தான்.












Click it and Unblock the Notifications