மீண்டும் இலங்கை கடற்படை வெறித்தனம்-80 மீனவர்கள் படுகாயம்!
இலங்கைக் கடற்படையினர் கையில் சிக்கி சிதைந்து கொண்டிருக்கிறது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம். குறிப்பாக ராமேஸ்வரம், நாகை மாவட்ட மீனவர்களின் நிலையும், வாழ்க்கையும் பெரும் கேள்விக்குறியாகி வருகிறது. கடலுக்குள்ளேயே போக முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்காகக் குரல் கொடுக்க யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அரசு கவலையேப் படாமல் உள்ளது. போராட்டங்கள் எத்தனை நடத்தினாலும் தாக்குதல்கள் சற்றும் குறைந்தபாடில்லை. தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர் இந்த அப்பாவி மீனவர்கள்.
நாகை மாவட்ட மீனவர் செல்லப்பன் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து திமுக மீனவர் அணி இலங்கை துணைத் தூதரகம் முன்பு போராட்டமெல்லாம் நடத்தியது. முதல்வர் கருணாநிதியும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ப.சிதம்பரத்தை விட்டு பதில் கொடுத்தது மத்திய அரசு.
ஆனால் என்ன நடவடிக்கையை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. இதுவரை தாக்குதல்கள் குறைந்தபாடில்லை.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ராமேசுவரத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 5 படகுகளில் சுமார் 30 சிங்கள கடற் படை வெறியர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி வந்தனர்.
இதனை பார்த்ததும் தமிழக மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் சிங்கள கடற்படையினர் 20 படகுகளை சுற்றி வளைத்தனர். பின்னர் ஒவ்வொரு படகிலும் அவர்கள் ஏறி மீனவர்களை அடித்து உதைத்து தாக்கினார்கள். மொத்தம் 80 மீனவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சில படகுகளில் மீன்பிடி வலைகளை அறுத்து எறிந்தனர். பின்னர் இந்த பகுதியில் மீன்பிடிக் வரக்கூடாது என்று எச்சரித்துவிட்டு சென்று விட்டனர்.
மீனவர்கள் படும் இந்த பாட்டுக்கு எப்போது விமோச்சனம் என்று தெரியவில்லை.