சாத்தான்குளத்தில் கிறிஸ்தவ ஆலயம் தீ வைத்து எரிப்பு
சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே கிறிஸ்தவ ஆலயத்திற்கு விஷமிகள் தீ வைத்ததால் ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
சாத்தான்குளம் அருகே உள்ளது சொக்கன்குடியிருப்பு. இங்கு பிரசித்த பெற்ற தனிஸ்லாஸ் கிறி்ஸ்தவ ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் ஜூலை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஊர்நலக்கமிட்டியினர் திருவிழா நடத்தி வந்தனர்.
இந்த ஆண்டு முதல் திருவிழாவை ஆலய கமிட்டி சார்பில் நடத்த முடிவு செய்தனர். இதில் பிரச்சனை ஏற்பட்டதால் விவகாரம் கோர்ட்டுக்கு சென்றது. இருதரப்பை கொண்ட குழு அமைத்து திருவிழா நடத்தலாம் என கோர்ட் தீர்ப்பு அளித்தது.
இதை தொடர்ந்து பங்கு தந்தை ஜ்ஸ்டின் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. திருவிழா விமரிசையாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்த குழு அமைத்தது ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு ஆலயத்தின் பின்பகுதியில் உள்ள அறையில் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்தவர்கள் கோயில் மணியை அடித்து பொதுமக்களை எழுப்பினர். ஊரே அங்கு திரண்டு வந்தது.
சாத்தான்குளம் தீயணைப்பு நிலையம் மற்றும் தட்டார்மடம் போலீஸ் ஆகியவற்றிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி மாரியப்பன் தலைமையில் வீரர்கள் வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் அறையில் இருந்த ஜெனரேட்டர், மற்றும் தேக்கு மரம் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகிவி்ட்டன. சேதமதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.