கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மீது சுமத்திய புகாரை நிரூபிக்க ஜெ. தயாரா? கருணாநிதி
சென்னை: தமிழக அரசின் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மீது கூறியுள்ள புகாரை நிரூபிக்க அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தயாராக இருக்கிறாரா என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
ஏழை- எளிய மக்கள் தரமான உயர் சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக கலைஞர் காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்துக்காக இந்த ஆண்டு ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஜெயலலிதாவோ, இந்தத் திட்டத்தின் கீழ் பிரிமீயம் தொகை ரூ.2 ஆயிரம் கோடி என்றும், ஏஜென்ட் கமிஷன் மட்டும் ரூ.400 கோடி என்றும் கோவை பொதுக்கூட்டத்தில் கூறியுள்ளார். இந்த அபத்தமான குற்றசாட்டை நிரூபிக்கத் அவர் தயாராக உள்ளாரா?
இந்த திட்டத்தின் மொத்த ஒதுக்கீட்டு தொகையே ரூ.750 கோடி தான் என்கிற போது, பிரிமீயம் தொகை மட்டும் ரூ.2 ஆயிரம் கோடி என்று கூறுவது பொய் என்று தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுப் பொறுப்பு வழங்கப்பட்ட ஸ்டார் அண்ட் அல்லைடு இன்சூரன்ஸ் என்ற நிறுவனம் முறைப்படி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும், இந்த நிறுவனம் இந்திய இன்சூரன்ஸ் காப்பீட்டு ஆணையத்தின் விதிமுறைகளின்படி இயங்கும் ஒரு நிறுவனமாகும். எனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒன்றும் வழங்கப்பட்டுவிடவில்லை.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இதுவரை ரூ.628 கோடி மட்டுமே தரப்பட்டுள்ளது. ஆனால், ஜெயலலிதா பொய்யான தகவலை பரப்பிக் கொண்டிருக்கிறார்.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 1 லட்சத்து 45 ஆயிரத்து 54 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் ஒரு குடும்பத்துக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், ஏழைகளுக்கு உதவியாய் இருக்கும் இந்தத் திட்டத்தையே ஜெயலலிதா தவறு என்கிறாரா? இல்லை ஏழை, எளிய மக்களின் அறுவைச் சிகிச்சைக்காக ஒரு லட்சம் ரூபாய் வழங்குவது தவறு என்று கூறுகிறாரா? அவரின் கேள்விக்கு இந்தத் திட்டத்தால் பயன்பெற்ற, பயன்பெறும் தமிழ்நாட்டு மக்கள்தான் பதில் அளிக்க வேண்டும்.
அவரது ஆட்சியில் இத்தகைய திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. இப்பொழுது கொண்டுவருபவர்களையும் கெடுக்கப் பார்க்கிறார்.
இது மட்டுமின்றி எங்களை ஊழலின் ஊற்றுக்கண் என்று அவர் கூறியுள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்தற்காக கடந்த 7 ஆண்டுகளாக அவர் மீது தான் வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது. ஜெயலலிதா தான் ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழ்கிறார் என்று முதல்வர் கூறினார்.