விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு வழங்க அமைச்சர் வேலு உத்தரவு
நாகர்கோவில்: ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 60 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு கூறினார்.
குமரி மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தை தொடங்கி வைத்த தமுழ்நாடு உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு கூறியதாவது,
ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 60 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். ரேஷன் கார்டில் மாற்றம் செய்து தர விண்ணப்பிப்பவர்களுக்கு விசாரணை செய்து அன்றைய தினமே மாற்றிக் கொடுக்க வேண்டும்.
அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ஒரே வண்ணத்தில் பெயிண்ட் அடிக்க வேண்டும். ரேஷன் கடைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். அங்கு விற்கப்படும் பொருட்களை மக்கள் பார்வையில் வைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.