தண்டவாளத்தில் வீசி வாலிபர் கொலை: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு
நெல்லை: நெல்லை அருகே தண்டவாளத்தில் வீசி வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை அருகே உள்ள கட்டுடையார் குடியிருப்பை சேர்ந்தவர் முத்தையா என்ற மதார். இவருக்கும் தச்சநல்லூரை அடுத்த ஆனந்தபுரத்தை சேர்ந்த சாந்திக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். முத்தையா குடும்பத்துடன் மும்பையில் தங்கி வேலை பார்த்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சாந்தி குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முத்தையா மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். அவரை சந்தித்த சாந்தியின் சகோதரர் குமார் தனது தங்கையுடன் சேர்ந்து வாழுமாறு கூறினார். ஆனால் அவர் மறுத்து விட்டார்.
இதன்பிறகு சில நாட்கள் கழித்து கரையிருப்பு அருகே ரயில் தண்டவாளத்தில் காயங்களுடன் முத்தையா இறந்து கிடந்தார். இது தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் நடத்திய விசாரணையில் குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து முத்தையாவுக்கு மது வாங்கி கொடுத்து ஓடையில் மூழ்கடித்து மயங்க செய்துள்ளனர். மயங்கிய நிலையில் இருந்த அவரை தச்சநல்லூர் பாலம் அருகே தண்டவாளத்தில் வீசியுள்ளதும், பின்னர் அந்த வழியாக வந்த ரயில் மோதி முத்தையா இறந்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக குமார் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
முத்தையாவின் தாய் சுடலி, நெல்லை வக்கீல் கண்ணன் மூலம் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
முத்தையா கொலையில் உள்ளூரை சேர்ந்த முக்கிய நபர்கள் 12 பேருக்கு தொடர்பு உள்ளது. இது குறித்து நான் கடந்த 17-8-09 அன்று தச்சநல்லூர் போலீஸ் மற்றும் உயரதிகாரிகளிடம் புகார் செய்தேன். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மாலா வழக்கு விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications