சந்தசிரபாபு நாயுடு மீது மகாராஷ்டிர போலீஸ் தடியடி-ஆந்திராவி்ல் பதட்டம்

மகாராஷ்டிர மாநிலம் பாப்லி அணையிலிருந்து கோதாவரி ஆற்றில் பெருமளவு தண்ணிரை மகாராஷ்டிர அரசு எடுப்பதாக ஆந்திரா குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில், பாப்லி அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப் போவதாக நாயுடுஅறிவித்தார்.
பின்னர் தனது கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்பட 74 பேருடன் கடந்த வெள்ளிக் கிழமையன்று பஸ் யாத்திரை ஒன்றை தொடங்கினார். ஆனால் நான்டெட் மாவட்டத்தில் வைத்து அவரை மகாராஷ்டிர போலீஸார் கைது செய்தனர். ஆனால் சிறைக்குப் போக மாட்டோம் என நாயுடு உள்ளிட்டோர் தர்ணாவில் குதித்ததால் அவர்களை தர்மாபாத்தில் உள்ள ஐடிஐக்கு கொண்டு சென்று தங்க வைத்தனர்.
இந்த நிலையில் வருகிற 26ம் தேதி நாயுடு உள்ளிட்டோரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நாயுடு உள்ளிட்டோரை சிறைக்கு மாற்ற மகாராஷ்டிர போலீஸார் முடிவு செய்தனர்.
இன்று காலை நாயுடு உள்ளிட்டோர் வைக்கப்பட்டிருந்த ஐடிஐக்கு அவர்கள் வந்தனர். அவர்களை சிறைக்கு அழைத்துச் செல்லவிருப்பதாக கூறினர். ஆனால் நாயுடு உள்ளிட்டோர் வர மறுத்து மகாராஷ்டிர போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் தடியடியில் இறங்கினர்.
நாயுடுவையும் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இந்த தடியடியில் பல எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சிறிது நேர தடியடிக்குப் பின்னர் அவர்களை குண்டுக் கட்டாக தூக்கி வேனில் போட்டு கொண்டு சென்றனர்.
நாயுடுவை அவுரங்காபாத்தில் உள்ள சிறையில் அடைக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மற்றவர்களையும் பல்வேறு சிறைகளில் பிரித்து அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆந்திராவில் பெரும் பதட்டம்
நாயுடு உள்ளிட்ட தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீது மகாராஷ்டிர போலீஸார் தடியடி நடத்தியதால் ஆந்திராவில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் பதட்டம் நிலவுகிறது. ஆயிரக்கணக்கான தெலுங்கு தேசம் கட்சியினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக பெரும் வன்முறை வெடிக்கும் அபாயமும் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications