சிபிஎம் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனுக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் வக்கீல் நோட்டீஸ்
சென்னை: எந்தவித ஆதாரமும் இன்றி தன் மீது குற்றம் சாட்டி பேட்டி அளித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனுக்கும், அந்த செய்தியை வெளியிட்ட வார இதழுக்கும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவரது வக்கீல் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது:
தா.மோ.அன்பரசன் இளம் பருவத்தில் இருந்தே தி.மு.க.வில் சேர்ந்து மக்களுக்கு பணியாற்றியதன் பயனாக 1996 முகல் 2006 வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் குன்றத்தூர் பேரூராட்சித் தலைவராக இருந்துள்ளார். அதன் பிறகு அவரது உண்மையான உழைப்பிற்கு கலைஞர் அளித்த வெகுமதி தான் அமைச்சர் பதவி. தனது பணியை செவ்வனே செய்து வருகிறார்.
இந் நிலையில், வார இதழ் ஒன்றில் பார்சல் நிறைய பணம்! கொடுத்தாரா எம்.எல்.ஏ, வாங்கினாரா அமைச்சர் என்ற செய்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அளித்த பேட்டியாக வெளியாகியுள்ளது. அதில், தா.மோ. அன்பரசனுக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கோவிந்தசாமி எம்.எல்.ஏ. பணம் கொடுத்ததாக ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குற்றசாட்டை கோவிந்தசாமி கட்சியில் இருக்கும்போது அவர் ஏன் கூறவில்லை? கோவிந்தசாமி மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து அன்மையில் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆதாரமற்ற குற்றசாட்டை செய்தியாக வெளியிட்டது ஒரு புறம் இருந்தாலும், இதில் உண்மையாகவே அமைச்சருக்கு தொடர்பு இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டது கண்டனத்துக்குரியது. இதனை பார்த்த கட்சி நண்பர்கள் மிகுந்த வேதனை அடைந்தார்கள்.
இவ்வாறு அபத்தமாக பேட்டி அளித்த மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும், அந்த செய்தியை வெளியிட்ட வாரஇதழும் மன்னிப்பு கேட்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில் நீதிமன்ற மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications