குமரியில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி: காய்ச்சல் பரவும் அபாயம்
மார்த்தாண்டம்: டெங்கு காய்ச்சலுக்கு குமரி மாவட்ட எல்லையோர கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பலியாகி உள்ளார்.
பன்றிக் காய்ச்சலைப் போல கேரளாவில் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சல் பரவாமல் தடுக்க கேரளா சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி துறை அமைப்புகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் கேரளாவில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தினசரியும், வாரத்திற்கு ஒரு முறையும் வீட்டிற்கு வந்து செல்கின்றனர். இதனால் குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலாம் என்று அஞ்சப்படுகிறது.
குமரி மாவட்ட எல்லையோர கிராமமான நெட்டாவை சேர்ந்தவர் ஜிசாமோள் சந்திரா. இவர் மார்த்தாண்டம் தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. டூரிசம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். விளையாட்டில் சிறந்து விளங்கிய இவர் பல பதக்கங்களையும், பரிசுகளையும் பெற்றுள்ளார்.
இவர் கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டார். திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.