சட்டசபை தேர்தலில் லேப்டாப்-வெப்காம்: வைத்திருப்போர் விவரம் சேகரிப்பு
நெல்லை: சட்டசபைத் தேர்தலில் லேப்டாப்புடன் கூடிய வெப் காம்களை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து இவற்றை வைத்திருக்கும் பொறியியல் மாணவர்கள் குறித்த விவரத்தை சேகரித்து வரும் தேர்தல் ஆணையம், மாணவர்களை இதில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
தமிழக சட்டசபையின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. இதனால் தேர்தலுக்கான ஆயத்தபணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. கடந்த ஜூலை 6-ம் தேதி சென்னையில் இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திருச்செந்தூர் இடைத்தேர்தல் வாக்குபதிவு முழுவதும் லேப்டாப்பி்ல் பொருத்தப்பட்ட வெப் கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டது. இந்த முறையை வரும் சட்டசபை தேர்தலிலும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் கள்ள ஓட்டு போடுதல், வாக்கு சாவடியை கைப்பற்றுதல் உள்ளிட்ட சம்பவங்களை 100 சதவீதம் தவிர்க்க முடியும் என தேர்தல் ஆணையம் நம்புகிறது. அதே நேரம் 234 தொகுதிகளிலும் லேப்டாப்புடன் வெப்கேமராவை பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணையத்திடமோ, அரசிடமோ, அரசு சார்ந்த நிறுவனங்களிடமோ போதிய லேப்டாப்கள் இல்லை.
எனவே பொறியியல் கல்லூரி மாணவர்களை வருகிற சட்டசபை தேர்தலில் முதன்முறையாக ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் லேப்டாப்கள் வைத்துள்ள மாணவர்களின் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications