சென்னை சிறுவனைக் கொன்று சூட்கேஸில் அடைத்து போட்ட பெண்-பரபரப்பு வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

Poovarasi
சென்னை: கள்ளக்காதலர் தன்னைத் திருமணம் செய்ய மறுத்ததால், அவரது மகனை கொலை செய்து சூட்கேஸுக்குள் அடைத்து நாகப்பட்டனத்தில் போட்ட கொடூரச் சம்பவம் குறித்து கைதான இளம் பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1 மணி முதல் ஒரு சூட்கேஸ் கிடந்துள்ளது. சிறிதுநேரத்தில் இதில் ஈ மொய்க்க ஆரம்பித்தது. இதைப் பார்த்த அங்கிருந்த கடைக்காரர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீஸார் சூட்கேஸை கிழித்துப் பார்த்தபோது அதில் ஒரு சிறுவனின் உடல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். முகத்தை பாலிதீன் பையால் இறுகக் கட்டியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தது தெரிய வந்தது.

யார் இந்த சிறுவன் என்பது தெரியாததால் விளம்பரம் கொடுக்கப்பட்டது. இதைப் பார்த்த சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற தொழிலதிபரின் மனைவி ஆனந்தி என்கிற ஆனந்தலட்சுமி நாகை விரைந்து வந்து சிறுவனின் உடலைப் பார்த்தார். பிறகு அது தனது மகன்தான் என்பதை அடையாளம் காட்டி கதறி அழுதபடி மயக்கமடைந்தார்.

பின்னர் அவரை தேற்றி போலீஸார் விசாரித்தபோது,

எனது கணவரின் தோழி பூவரசி. அவர் வேப்பேரியில் இருக்கும் ஒய்.டபுள்யூ.சி.ஏ. விடுதியில் தங்கி பஜாஜ் இன்சூரன்சில் வேலை பார்க்கிறார். தனது விடுதியில் ஏதோ விழா என்று கூறி என் மகன் ஆதித்யாவை அழைத்து சென்றார். மாலை ஆகியும் என் மகனை வீட்டிற்கு கொண்டு வந்து விடவில்லை.

அதனால், பூவரசியின் செல்லுக்கு போன் செய்த போது சுவிட்ச் ஆப் என்று வந்தது. அவர் தங்கி இருந்த விடுதிக்கு சென்று பார்த்த போது, அவர் மருத்துவமனையில் இருப்பதாக சொன்னார்கள்.

மருத்துவமனைக்கு சென்றால், பூவரசி சென்னை ஐகோர்ட் அருகில் உள்ள கோவில் வழியாக வருகையில் தான் மயங்கி விட்டதாகவும், ஆதித்யா பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் கூறினார்.

இது குறித்து போலீசில் புகார் கொடுக்க சென்ற போது தான் நாகையில் ஒரு சிறுவனின் சடலம் கிடைத்துள்ளது என்றார்கள். அதை கேட்டு இங்கு ஓடி வந்தேன் என்றார்.

இதையடுத்து போலீஸார் பூவரசியைப் பிடித்து விசாரித்தனர். ஆரம்பத்தில் மறுத்த பூவரசி பின்னர் தான்தான் ஆதித்யாவைக் கொலை செய்ததாக ஒத்துக் கொண்டார். ஜெயக்குமாரை பழிவாங்கவே இவ்வாறு செய்ததாகவும் அவர் கூறினார்.

இதுதொடர்பாக பூவரசி கொடுத்துள்ள வாக்குமூலம்:


ஜெயக்குமாரின் கீழ் வேலை பார்த்த போது, என்னிடம் வந்து ஐ லவ் யூ சொன்னார். இதேபோல் தான் அவரிடம் முதலில் வேலைபார்த்த ஆனந்தலட்சுமியையும் காதலித்து திருமணம் செய்துள்ளார். ஜெயக்குமார் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர். ஆனந்தலட்சுமி கும்பகோணத்தை சேர்ந்தவர் ஆவார். இருவரும் ஒரே சாதி என்பதால் ஆனந்தலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். நான் வேறு சாதி என்பதால் என்னை காதலித்து பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிட்டார். அவரது பேச்சை நம்பி 2 முறை கருவை கலைத்து என்னை நாசப்படுத்திக் கொண்டேன்.

என்னை சமாதானப்படுத்துவதற்காக வேலையை இழந்திருந்த எனக்கு, அவர் வேலைபார்த்த கம்பெனியில் வேலை வாங்கி கொடுத்தார். என்னையும் திருமணம் செய்துகொண்டு சென்னையிலேயே அந்த வேலையை கொடுக்கும்படி ஜெயக்குமாரிடம் மன்றாடினேன். ஆனால் வேண்டுமென்றே மதுரையில் எனக்கு பணி கொடுத்துவிட்டார். மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் என்று ஜெயக்குமார் கூறினார். மதுரையில் வேலைக்கு சேருவதற்கு முன்பு பழி வாங்க நினைத்தேன்.

அதன்படி கொலை திட்டம் வகுத்தேன். வயிற்றில் வளர்ந்த எனது வாரிசை அழித்த ஜெயக்குமாரின் வாரிசையும் வாழவிடக்கூடாது என்ற வெறி எனக்குள் ஏற்பட்டதால்தான் ஆதித்யாவை தீர்த்துக் கட்டினேன்.

கொலை செய்வதற்கு முன்பு அவன் விரும்பி சாப்பிடும் சாம்பார் வடையும், தர்பூசணி ஜுசும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வாங்கி கொடுத்தேன். அதன்பிறகுதான் நான் தங்கியிருந்த அறைக்கு வந்து ஆதித்யாவை சத்தம் போடாமல் இருப்பதற்காக முதலில் பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடினேன். மேலும் பாசத்தோடு பழகிய அவனது முகத்தை பார்த்தால் கொலை திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று கருதினேன். எனது மனதில் இரக்கம் வராமல் இருப்பதற்காகவும் அவ்வாறு செய்தேன். முகத்தை மூடியவுடன் முதலில் பாவாடை நாடாவால் கழுத்தை இறுக்கினேன். உயிர் போகவில்லை. அதன்பிறகு ஸ்கிப்பிங் கயிறால் கழுத்தை இறுக்கி கொன்றேன். ஏற்கனவே பத்திரிகைகளில் படித்த செய்தியை வைத்து கொலையை மறைப்பதற்காக சூட்கேசில் பிணத்தை திணித்து பஸ்சில் அனுப்ப முடிவு செய்தேன்.

எவ்வளவுதான் மனதை கல்லாக்கினாலும் மனது தாங்கவில்லை. கொலை செய்த பிறகு அறையில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுதேன். அதன்பிறகு பாவமன்னிப்பு கேட்பதற்காக கிறிஸ்தவ கோவிலுக்கு சென்று ஜெபம் செய்தேன். பிணத்தை பஸ்சில் அனுப்பாமல் புதுச்சேரியில் கடலில் வீசிவிடலாம் என்று நினைத்தேன். புதுச்சேரியில் பஸ்சை விட்டு இறங்கியபோது காலை 8 மணியாகும். அப்போது போலீஸ் பாதுகாப்பு இருந்ததால், பிணம் இருந்த சூட்கேசை நாகப்பட்டினம் செல்லும் பஸ்சில் வைத்துவிட்டு வந்துவிட்டேன்.

நான் செய்தது தவறு என்று தெரிந்தாலும், ஜெயக்குமார் போன்றவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பெண்கள் என்றால் எப்படி வேண்டுமானாலும் தங்களது இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டு தூக்கி வீசிவிடலாம் என்று ஆண்கள் நினைக்கிறார்கள். அதுபோல் இனி நடக்கக் கூடாது என்றார் பூவரசி.

கொலை நடந்த பூவரசி தங்கியிருந்த விடுதியில் எந்த சப்தமும் கேட்கவில்லை என்று வாட்ச்மேன் உள்ளிட்டோர் கூறியுள்ளனர். சத்தம் வராத அளவுக்கு சிறுவனின் முகத்தை மூடிகொலை செய்துளளார் பூவரசி. பின்னர் உடலை சூட்கேஸுக்குள் வைத்து வெளியே கொண்டு வந்தபோது வாட்ச்மேன் என்ன என்று கேட்டுள்ளார். உறவினர் இறந்து விட்டதால் அவசரமாக ஊருக்குப் போவதாக கூறியுள்ளார் பூவரசி.

மிகத் துணிச்சலாக செயல்பட்டு இந்த படு பாதக செயலை செய்துள்ள பூவரசியை போலீஸார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளனர்.

சிறுவன் உடல் அடக்கம்

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுவன் ஆதித்யாவின் உடல் அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கொலையாளியான பூவரசியை இன்று ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் போலீஸார் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+