இலங்கைக்கு அளித்த நிதி-கண்காணிக்க குழு அமைப்பாம்!
இலங்கையில் போர் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் 40,000க்கும் மேற்பட்ட தமிழர்கள், கழிப்பறை உள்ளிட்ட எந்த அடிப்படையும் இல்லாத, முகாம்களிலேயே அடைத்து வைக்கப்பட்டு்ள்ளனர்.
இவர்களை இங்கு அடைத்து வைத்துவிட்டு அவர்கள் வசித்த பகுதிகளில் சிங்களர்களை வேகவேகமாக குடியேற்றி வருகிறார் அதிபர் ராஜபக்சே.
இந்நிலையில், இந்திய நாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத் தொடர் வரும் தொடங்க உள்ள நிலையில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் அக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.
இதில் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய பாலு, இலங்கையில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தும் பணியை விரைவாக கால தாமதம் இன்றி நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களின் மறு குடியேற்றத்துக்காக அவர்களுக்கு வீடு கட்டித் தரவும் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் மத்திய அரசு மூலம் ரூ.500 கோடி அளித்ததுடன், 50,000 வீடுகளை கட்டித் தரவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
இந்திய அரசால் வழங்கப்பட்ட இந்த நிதி எந்த அளவுக்கு முறையாக செலவழிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. அதை தெரிந்து கொள்ளவும் முடியவில்லை.
இலங்கையில் மறுவாழ்வுப் பணிகளையும், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள உண்மையான நிலைமையைக் கண்டறியவும் தூதரகம் மூலமாகவோ அல்லது சிறப்புத் தூதரை அனுப்புவதன் மூலமாகவோ நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று முதல்வர் கருணாநிதி ஆலோசனை கூறியிருந்தார். இதை உடனடியாக செயல்படுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்து பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக வழங்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்பதை அறிய, அதிகாரிகள் குழு நியமிக்கப்படும். இந்தக் குழுவை அங்கு அனுப்புவதற்கு முறைப்படியான அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதாவது இலங்கை அனுமதி தந்தால் இந்தக் குழு போகும் போலத் தெரிகிறது... உருப்படும்!.