குற்றால சீசன் எதிரொலி்: சிவகாசியில் பட்டாசு தொழில் பாதிப்பு
சிவகாசி: குற்றாலத்தில் குளு குளு சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து விட்டு விட்டு பெய்யும் சாரல் மழையால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுபுற கிராம பகுதிகளில் சுமார் 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி சீசன் என்று கூறப்படும் ஜூலை இறுதி வாரத்தில் இருந்து தீபாவளி வரை பட்டாசு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெறும்.
பட்டாசு தொழிலுக்கு மிகவும் உதவி செய்வது சுட்டெரிக்கும் வெயில் தான். கடந்த ஒரு வாரமாக குற்றாலத்தில் சீசன் களை கட்டியுள்ளது. இதை தொடர்ந்து சிவகாசி பகுதியில் திடீரென்று வரும் மேக கூட்டங்கள் அவ்வப்போது சாரல் மழையை தூவுவதால் பட்டாசு தயாரிக்கும் பணி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
காலையில் சாரல் மழை பெய்து பகலில் வானம் மேக மூட்டமாக காணப்படுவதால் மருந்து கலவைகளை வெடிகளில் செலுத்தி உலர வைக்க முடியவில்லை. கடந்த வாரம் வியாழன் முதல் வெயில் குறைந்து சாரல் மழை பெய்ய துவங்கியது. இதையடுத்து சனிக்கிழமை ஆடி 1ல் பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மறுநாள் ஞாயிரும் விடுமுறை. திங்கள், செவ்வாய் கிழமைகளிலும் சாரல் மழை தொடர்ந்ததால் அந்த இரு தினங்களும் விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில் நேற்றும் காலை முதல் மேகம் சூழ்ந்து குளிர்காற்று வீசியதால் பெரும்பாலான பட்டாசு ஆலைகளில் பட்டாசு தயாரிக்கும் பணி வெகுவாக பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக பட்டாசுகளை தயாரித்து உலர வைக்க முடியாத சூழ்நிலையில், தொழிலாளர்களும் போதிய வேலையின்றி தவிக்கின்றனர்.
குளுகுளு சீசனில் குற்றாலம் களை கட்டி மக்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.