உமாசங்கர் ஐ.ஏ.எஸ். திடீர் சஸ்பெண்ட்!
சென்னை: தமிழக சிறுசேமிப்புத் துறை ஆணையராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடங்கப்பட்டது. இதன் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக உமாசங்கர் நியமிக்கப்பட்டார்.
பின்னர் அந்தப் பணியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு சிறுசேமிப்புத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இந் நிலையில் உமாசங்கர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை பரிந்துரை செய்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் உமாசங்கர். அவர் தாக்கல் செய்த மனுவில்,
அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநராக இருந்த போது, சுமங்கலி கேபிள் டி.வியை தேசியமயமாக்கவும், மத்திய அமைச்சர் ஒருவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, ஊழல் தடுப்பு டி.எஸ்.பியிடம் சொத்து விவரங்களை அளிக்காததன் மூலம் உமாசங்கர் விதிகளை மீறியுள்ளார். இதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்றும், அவருக்கு எதிரான புகாருக்கு முதற்கட்ட ஆதாரம் இருப்பதாகவும், ஊழல் தடுப்பு போலீஸ் விசாரணையில் இருந்து அவர் பாதுகாப்பு கோர முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது.
இந் நிலையில், உமாசங்கர் நேற்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஊழல் தடுப்பு போலீஸ் விசாரணையில் இருப்பதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து, சுற்றுலாத் துறை மேலாண் இயக்குநராக இருந்த மோகன்தாஸ், சிறுசேமிப்புத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.