தீவிரவாதிகள் சென்னை விமானத்தை கடத்த வாய்ப்பு: மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானத்தை கடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து விமான நிலைய உயர் அதிகாரிகள் அவசரமாக ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.
இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் இருந்து விமானங்களை கடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் வந்துள்ளது. தீவிரவாதிகள் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானத்தை கடத்தக் கூடும் என்று தமிழக அரசிற்கு மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.
இதையடுத்து, சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் அவசரமாக ஆலோசனை கூட்டத்தை நேற்று மாலை கூட்டினார்கள்.
இதில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண், உளவுப் பிரிவு இணை இயக்குநர் சங்கர நாராயணன், தேசிய பாதுகாப்பு குழு சார்பில் லெப்டினேன்ட் கர்னல் ராஜி, புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட், தொழில் பாதுகாப்பு படை கமாண்டர் ஜோசப், விமான நிலைய இயக்குநர் ஹரேந்திர நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் விமான கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், விமான நிலைய பாதுகாப்பு குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.