'தமிழகத்தின் பெண் புரூட்டஸ் ஜெயலலிதா'-பொன்முடி தாக்கு

Subscribe to Oneindia Tamil

Ponmudi
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக ஜெயலலிதா நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நெருங்க நெருங்க ஜெயலலிதா ஏதாவது ஒரு அறிக்கை தன் பெயரில் வரவேண்டும் என்பதற்காக எதை எதையோ எழுதச் சொல்கிறார், அதை அறிக்கையாக தன் பெயரில் வெளியிடச் செய்கிறார்.

முதல் நாள் விலைவாசி என்றார், அடுத்த நாள் மின்வெட்டு என்கிறார். அடுத்த நாள் இலங்கைத் தமிழர்கள் என்கிறார். அதற்கு, முதல்வர் கருணாநிதி ஆணித்தரமாக கொடுக்கின்ற விளக்கங்களைப் படிப்பதும் இல்லை.

இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக முதல்வர் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை. அன்னை சோனியா காந்திக்கும், பிரதமருக்கும், மத்திய மந்திரிகளுக்கும் முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதுகிறார். பிரதமர் அந்தக் கடிதங்களுக்குப் பதில் எழுதுகிறார்.

இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, பெரியவர் சம்பந்தம், மா.வெ.சேனாதிராஜா மற்றும் நண்பர்கள் சென்னைக்கு வந்து முதல்வரை சந்திக்கிறார்கள். பின்னர் நிருபர்களிடம் அதைப்பற்றி பாராட்டி சொல்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வருவதைக் கண்டு ஜெயலலிதாவினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இதற்கிடையே உள்கட்சி குழப்பம் வேறு அவருடைய கட்சிக்குள் நடக்கிறது. அவர்களையெல்லாம் மாற்றுகிறேன் என்கிறார்.

இலங்கைத் தமிழர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் என்றதும் முதல்வர் கருணாநிதி யாரிடமும் தெரிவிக்காமல் பொழுது விடிவதற்குள் அண்ணா நினைவிடம் சென்று சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்குகிறார். சாகும் வரை உண்ணாவிரதம் என்று முதல்வர் தொடங்கியதும் இந்தியாவே அதிர்ந்தது.

சோனியா காந்தி, பிரதமர், மத்திய அமைச்சர்கள் என்று எல்லோரும் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார்கள். மத்திய அரசே கவலைப்படுகிறது. இலங்கையுடன் பேசுகிறது. அந்தத் தகவலைத் தெரிவிக்கிறது. ஆனால், ஜெயலலிதா அதற்குக் கூட உள் அர்த்தம் கற்பித்து, மூன்று மணி நேர உண்ணாவிரதம்' என்று கிண்டல் செய்கிறார் என்றால், அவர் முதல்வரைக் கிண்டல் செய்யவில்லை, இலங்கையில் வாடிக் கொண்டிருக்கின்ற லட்சக்கணக்கான தமிழர்களைப் பற்றி அக்கறையற்ற தன்மையோடு செயல்படுகிறார் என்றுதான் அர்த்தம்.

கருணாநிதியின் பேச்சை நம்பி பதுங்கு குழிகளில் இருந்து அப்பாவி இலங்கைத் தமிழர்கள் வெளியே வந்ததாகவும், அவர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்துவிட்டதாகவும் ஜெயலலிதா ஒரு கற்பனைக் கதையைத் தொடர்ந்து சொல்லிவருகிறார்.

முதல்வர் உண்ணாவிரதம் இருந்தது எப்போது? இலங்கை ராணுவம் போர் நடத்தியது எப்போது? என்ற விவரம் கூட தெரியாமல் ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறார்.

போர் என்றால் பொதுமக்கள் கொல்லப்படுவது சகஜம் தானே' என்று வசனம் பேசிய வாய், இன்று தமிழகத்தில் தேர்தல் வருகிறது என்றவுடன் ஜாலவித்தைக் காட்ட முற்படுகிறது.
தமிழகத்தின் பெண் புரூட்டசாக, "திமுகதான் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறது'' என்று வைகோவை பக்கத்திலே வைத்துக் கொண்டு வீராவேசம் காட்டுகிறார்.

உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரால் ஜெயலலிதா ஆட்சியிலே இருந்து தஞ்சையில் நடத்தியபோது, இலங்கையில் இருந்து அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த பேராசிரியர் சிவத்தம்பி போன்ற தமிழ் அறிஞர்களை அவமானம் செய்து திருப்பி அனுப்பியவர்தான் ஜெயலலிதா.

அந்த மாநாட்டுக்காக பாடப்பட்ட மைய நோக்க விளக்கப்பாடலில் கூட மைய நோக்கமே ஜெயலலிதாதான் என்று தன்னுடைய சொந்தப் புகழைப் பாடச்செய்து புளகாங்கிதம் அடைந்த ஜெயலலிதா தற்போது உலகத்தமிழ் அறிஞர்கள் எல்லாம் பாராட்டிப் பெருமை கொள்கிற அளவுக்கு கோவையில் நடைபெற்ற மாநாட்டைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அடுத்த வீட்டுகாரிக்கு பிள்ளை பிறக்கப்போகிறது என்றதும், தன் வயிற்றிலே உலக்கையை எடுத்துக் குத்திக் கொண்ட காந்தாரியைப் போல ஜெயலலிதா அறிக்கை விடுகிறார்.

முதல்வர் கருணாநிதி குடும்பத்தினர் கோவை மாநாட்டிலே கலந்து கொண்டார்களாம், அலறித் துடிக்கிறார்.

கூந்தல் உள்ள பெண்மணி கொண்டை போட்டுக் கொள்வதைப் பார்த்து குடும்பம் என்றால் என்னவென்றே தெரியாமல், ஊரான் குடும்பத்தை தன் குடும்பமாக்கிக் கொண்டு- ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டவரா முதல்வர் கருணாநிதி குடும்பத்தைப் பற்றி கூறுவது?.

திமுக சார்பில் அந்தக்காலத்தில் இருந்து இந்தக்காலம் வரையில் மாநாடு என்றால் குடும்பம் குடும்பமாக வந்து கலந்து கொள்வது தான் வழக்கம்.

இலங்கையில் போர் முடிந்ததும், அங்குள்ள அப்பாவி தமிழ் மக்களுக்காக- அவர்களுக்கொரு நல்வாழ்வு அமைய வேண்டும் என்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைத்ததற்குக்கூட அற்பத்தனமான காரணம் கூறி, அவர்கள் ஏதோ விலை உயர்ந்த பொருட்களை பரிமாறிக் கொண்டார்கள் என்றெல்லாம் ஜெயலலிதா விமர்சனம் செய்கிறார்.

ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக பெற்ற பரிசுகளுக்காக இன்னமும் வழக்கு நடைபெறுகிறது. அந்த வழக்கை எதிர்க்க முடியாமல் வாய்தா வாங்கிக்கொண்டு இருக்கிறார். வெளிநாட்டில் இருந்து யாரிடம் இருந்தோ வந்த காசோலையை தன் பெயரில் டெபாசிட் செய்துகொண்ட ஜெயலலிதா, அறிக்கை என்ற பெயரால் ஆபாச வார்த்தைகளைக் கொட்டுகிறார் என்றால், அதற்கு பதிலடி கொடுக்க திமுக தயங்காது.

இவ்வாறு பொன்முடி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+