சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் இன்று தேரோட்டம்
சங்கரன்கோவில்: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் ஆடி தபசு திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் புகழ் பெற்ற சிவஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி திருக்கோவில் ஒன்றாகும். இக்கோவிலில் சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்தபடுவது தவறு என்பதை உலகுக்கு உணர்த்தும் பொருட்டு அன்னை கோமதியின் தவத்துக்கு இணங்க சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி அளிக்கிறார். இச்சிறப்பு மிக்க திருவிழா இந்த மாதம் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் மண்டகபடி நடைபெற்றது. காலையும், மாலையும் கோமதி அம்மாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வெவ்வேரு திருக்கோலத்தில் திருவீதியுலா நடைபெற்றது.
ஒவ்வொரு நாளும் மாலையில் திருக்கோவில் கலையரங்கில் சிறப்பு சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றது. 9-ம் நாளான இன்று தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேரை இழுத்தனர்.