விலைவாசி: 'வருண பகவான் காப்பாத்துவார்'-பிரதமர்

டெல்லியில் இன்று பிரதமர் தலைமையில் பேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், இப்போது அமலில் உள்ள திட்டங்கள், அவற்றின் முன்னேற்றம் ஆகியவை குறித்து இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதில் துவக்க உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு நல்ல திருப்திகரமான அளவுக்கு பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உணவு உற்பத்தி அதிகரிக்கும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் உணவு பணவீக்க விகிதம் 6 சதவீதத்திற்கும் கீழ் குறைந்து விலைவாசி கட்டுக்குள் வந்துவிடும் என்று நம்புகிறோம்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தொடர்ந்தும் எடுத்து வருகிறது.
12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் வேளாண்மை திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கிராமப்புற திட்டங்களுக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய பொருளாதார மந்த நிலையால் இந்தியாவின் பொருளாதாரமும் கடந்த 2008-09 ஆண்டில் 6.7 சதவீதமாகக் குறைந்தது.
எனினும் மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து கடந்த ஆண்டு 7.4 சதவீதத்தை எட்டியது. நடப்பு நிதியாண்டில் அது மேலும் அதிகரித்து 8.5 சதவீதமாக உயரும்.
நாட்டின் வளர்ச்சிக்கு வரி சீர்திருத்தம் மிகவும் அவசியம். எனவே தான் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவைகள் வரி விதிப்பில் புதிய மாற்றத்தை கொண்டு வர உத்தேசித்துள்ளது.
அடுத்த நிதியாண்டிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ள இந்த வரி விதிப்பு முறைக்கு அனைத்து முதல்வர்களும் தங்கள் ஆதரவை அளிக்க வேண்டும். இந்த வரி விதிப்பு முறைக்கு அரசியல் சாசனத்தில் திருத்தம் அவசியம் என்பதால் அனைத்து மாநில முதல்வர்களும் இதை ஆதரிக்க வேண்டும் என்றார்.
இக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் மு.க.ஸ்டாலின் முதல்வர் கருணாநிதியின் உரையை வாசித்தார்.












Click it and Unblock the Notifications