For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முன்னாள் அரசு ஊழியர் சங்கத் தலைவர் சூரியமூர்த்தி மீதான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் கோ.சூரியமூர்த்தி மீதான அனைத்து வழக்குகளும் அதிரடியாக தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.

என்ஜிஓ சங்கம் எனப்படும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத் தலைவராக பல வருடங்கள் செயல்பட்டவர் சூரியமூர்த்தி. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின்போது அதிமுகவுக்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கு ஆளானவர்.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் திமுகவின் பக்கம் சாய்ந்தார். இவர் மீது 6 வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன. பண மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்குகள் இவை. இதில் இவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என நம்பப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் ஓய்வு பெற்றார். ஓய்வு பெறுவதற்கு முன்பு முதல்வர் கருணாநிதிக்கும், தமிழக அரசுக்கும் நன்றி கூறும் மாநாடு என்ற பெயரில் பிரமாண்டமான மாநாட்டை சென்னையில் நடத்தினார். அப்போது சூரியமூர்த்தியை முதல்வர் கருணாநிதி வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.

இந்த நிலையில் சூரியமூர்த்தி மீது இருந்த 6 வழக்குகளும் அதிரடியாக தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.

கூட்டுறவு சங்கத்தில் மோசடி

1999-2003-ம் ஆண்டுகளில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தில் மோசடி செய்ததாக 17 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அந்த வழக்கில் 31.7.08 அன்று கூடுதல் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் சூரியமூர்த்தி குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார்.

இந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி சி.டி.செல்வம் விசாரித்தார். சூரியமூர்த்தியின் மனுவை ஏற்றுக் கொண்டு, கடலூர் கோர்ட்டில் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையை ரத்து செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

அரசுப் பணம் கையாடல் வழக்கு

மேலும், சங்கத்தின் தலைவராக இருந்து கொண்டு சூரியமூர்த்தி, அரசுப் பணத்தை கையாடல் செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் கங்கைமுத்து என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதுதொடர்பாக கங்கைமுத்து கொடுத்திருந்த மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவரது மனு ஏற்கனவே பைசல் செய்யப்பட்டதாக அரசு பதிலளித்து இருந்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கங்கைமுத்துவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

வருமானத்திற்கு அதிகமான சொத்து

மேலும், சூரியமூர்த்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இதுதொடர்பான குற்றச்சாட்டை திருச்சியில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயத்தின் ஆணையர் விசாரித்தார்.

விசாரணை முடிவில், அந்த குற்றச்சாட்டு தொடர்பான உண்மையை கண்டறியும் அறிக்கையை அவர் வெளியிட்டார். அதில், சூரியமூர்த்தி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகவில்லை என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

மேலும் 3 வழக்குகள்

இந்த வழக்குகளுடன் மேலும் 3 வழக்குகள் சூரியமூர்த்தி மீது சுமத்தப்பட்டு இருந்தன. மொத்தமுள்ள 6 வழக்குகளில் இருந்தும் சூரியமூர்த்தி படிப்படியாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

பணியிலிருந்து ஓய்வு பெற்று சில நாட்களே ஆகியுள்ள நிலையில் சூரியமூர்த்தி அனைத்து வழக்குகளிலிருந்தும் அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X