விஷவாயுக் கசிவு ஏற்பட்ட பாக்ஸ்கான் செல்போன் நிறுவனம் மூடப்பட்டது
சென்னை அருகே சுங்குவார்சத்திரத்தில் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் செல்போன் உதிரி பாக தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இங்கு 2 நாட்களுக்கு முன்பு விஷவாயுக் கசிவு ஏற்பட்டு 200 பேர் வரை பாதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு நுரையீரலில் பாதிப்பு, தொண்டைக் கரகரப்பு, வாந்தி ஆகியவை ஏற்பட்டது. இதையடுத்து நிறுவனத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். என்ன காரணம் இந்த சம்பவத்திற்கு என்பது தெரியும் வரை வேலை பார்க்க மாட்டோம் எனக் கூறி விட்டனர்.
இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சுகாதாரத் துறை இணை இயக்குநர் ராஜேசகரனும் வந்து ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வின்போது முறையான சுகாதார வசதிகள் அங்கு இல்லாததும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுகாதாரத் துறையின் தகுதிச் சான்றிதழ் பெறாததும் தெரிய வந்தது. இதையடுத்து நிறுவனத்தை மூட உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து நிறுவனம் மூடப்பட்டு விட்டது.