ஈ ஆடும் என்ஜினீயரிங் கல்லூரிகள்: 15 கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை

என்ஜினீயரிங் படிப்பிற்கான கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்து முடிந்தது. இதில் 55 ஆயிரத்து 164 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இந் நிலையில் 15 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. மேலும், 88 கல்லூரிகளில் 5 சதவிகிதத்திற்கும் குறைவான இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன.
தமிழகத்தில் சுமார் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சிவில், மெக்கானிக்கல் போன்று 47 பாடப் பிரிவுகள் உள்ளன. அதில் எலக்ட்ரானிக் கம்யுனிகேசன் பிரிவை 13,668 மாணவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மெக்கானிக்கல் பிரிவை 9,853 பேர்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை 8,795 பேர்களும், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவை 6,794 பேர்களும் தேர்ந்தெஎடுத்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப பிரிவை 5,113 பேர்களும், சிவில் பிரிவை 4,381 பேர்களும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஏரோனாட்டிக்கல் பிரிவை 958 பேர்களும், பயோ டெக்னாலஜி பிரிவை 637 பேர்களும், ஆட்டோமொபைல் பிரிவை 428 பேர்களும் தேர்ந்தெடுத்துள்ளனர்.
தமிழ் வழி என்ஜினீயரிங் படிப்பில், சிவில் பிரிவில் 235 பேர்களும், மெக்கானிக்கல் பிரிவில் 204 பேர்களும் சேர்ந்துள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி 15 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. மேலும், 88 கல்லூரிகளில் 5 சதவீதத்திற்கும் குறைவான இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன.
இதற்கான காரணம் குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போதுள்ள மாணவர்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். கட்டமைப்பு வசதிக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். சில மாணவர்கள் தாங்கள் படிக்க விரும்பும் கல்லூரிக்கு நேரில் சென்று விசாரித்த பிறகே கல்லூரியை தேர்ந்தெடுக்கின்றனர். பிடித்த பாடத்தை விட நல்ல கல்லூரிகளில் சேர்வதைத் தான் விரும்புகின்றனர். சில மாணவர்கள் மட்டுமே எந்த கல்லூரியாக இருந்தாலும் சரி பிடித்த பிரிவு கிடைத்தால் போதும் என்று நினைக்கின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications