வயர் அறுந்தது: சென்னை வேளச்சேரி-கடற்கரை பறக்கும் ரயில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை: மின்சார வயர் அறுந்ததால் சென்னையில் பறக்கும் ரயில் போக்குவரத்து முடங்கியது.
சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இரு மார்க்கத்திலும் அரை மணி நேரத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது.
இந் நிலையில் இன்று காலை 8 மணியளவில் வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற ரயில் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்தபோது மின் கம்பி அறுந்து விழுந்தது. இதையடுத்து அந்த ரயில் வழியில் நிறுத்தப்பட்டது.
இதனால் 2 மணி நேரம் பறக்கும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர பெரும் பாதிப்புக்குள்ளாயினர்.
அறுந்து கிடந்த வயர் சரி செய்யப்பட்டு 10 மணிளவில் போக்குவரத்து சீரானது.
ரயில்வே காண்டிராக்ட்-சோனியா செயலாளர் பெயரில் மோசடி:
இந் நிலையில் ரயில்வே காண்ட்ராக்ட்டைப் பெற சோனியா காந்தியின் செயலாளர் அகமத் படேலின் பெயரை மோசடியாக பயன்படுத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை செளகார்பேட்டையைச் சேர்ந்த முன்னிலால் ஜெயின் (36) நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் பார்சல்களை ஏற்றி-இறக்க காண்டிராக்ட் எடுத்திருந்தார். அதற்காக 2 நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இந்த 3 வருட காண்டிராக்ட் கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் அந்த காண்டிராக்டை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து தருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் செயலாளர் அகமதுபடேல் பெயரில் அவரது லெட்டர் பேடில் போலியாக ஆவணம் தயாரித்து தென்னக ரயில்வேயில் சமர்பித்தார்.
ஆவணத்தை ரயில்வே வர்த்தகப் பிரிவு துணை ஆணையர் வீரநாராயணன் ஆய்வு செய்தபோது அது போலி என்று தெரியவந்தது. இதையடுத்து ஜெயின் மீது பூக்கடை போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து ஜெயின் தலைமறைகிவிட்டார். அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications