விஷவாயுக் கசிவு எதிரொலி-பாக்ஸ்கான் நிறுவனம் 3வது நாளாக இன்றும் மூ்டல்
ஸ்ரீபெரும்புதூர்: விஷ வாயுக் கசிவு காரணமாக பாக்ஸ்கான் செல்போன் உதிரிபாக நிறுவனம் இன்று 3வது நாளாக மூடப்பட்டிருந்தது.
சென்னை அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில் பாக்ஸ்கான் என்ற தைவான் நாட்டு செல்போன் உதிரிபாக நிறுவனம் உள்ளது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. இதில்சிக்கி 200 தொழிலாளர்கள் பாதிப்படைந்தனர்.
இதையடுத்து ஆலை மூடப்பட்டது. அதேசமயம், இந்த விஷ வாயுக் கசிவுக்கு என்ன காரணம் என்பதை அறிந்து தொழிலாளர்களுக்குத் தெரிவிக்கக் கோரி அங்கு பணியாற்றி வரும் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் குதித்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜசேகரன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் சுகாதாரக் கேடு அங்கு மலிந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நிறுவனத்தை மூடவும் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து நேற்றும் நிறுவனம் மூடப்பட்டது.
இன்றும் நிறுவனம் திறக்கப்படவில்லை. மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த தொழிலாளர்களில் 26 பேர் நலமடைந்தனர். இதையடுத்து அவர்கள் வீடு திரும்பினர். ஆனால் அங்கு போனதும் மீண்டும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் அவர்களை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பதட்டம் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications