தமிழகத்துக்கு சீனாவால் ஆபத்து: வைகோ எச்சரிக்கை
முன்னாள் எம்பி டாக்டர் ஏ.என். கலாநிதி எழுதிய 'சீனப் பெருஞ்சுவர்' என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது நூலை வெளியிட்டு வைகோ பேசுகையி்ல்,
தென்னகத்தில் தான் கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகளும், ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளமும், தும்பா உள்ளிட்ட விண்வெளி ஆய்வு மையங்களும், ஆவடி உள்ளிட்ட பாதுகாப்பு கேந்திரங்களும் உள்ளன.
இலங்கையில் தமிழர்களை அழிக்க ராஜபக்சே அரசுக்கு சீனா ஆயுத உதவி செய்தது. இதன்மூலம் இந்தப் பகுதியில் சீனா காலூன்ற முயற்சிக்கிறது.
இதனால், தமிழகம் உள்பட தென்னகத்துக்கு சீனாவால் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை தாக்குதலுக்கு ஆளாகாத தமிழகமும் வருங்காலத்தில் தாக்கப்படும் அபாயம் உள்ளது.
சீனத்தை பகை நாடாக இந்தியா கருதியதே இல்லை. அந்த நாட்டுடன் நட்புறவு பாராட்டவே, நேரு விரும்பினார். ஆனால், சீனாதான் நம் மீது படையெடுத்து இந்திய மக்களின் மனங்களை தவிக்க வைத்தது.
அப்போது சிறையில் இருந்த அண்ணா, நேருவின் வேண்டுகோளை ஏற்று பிரிவினை கோரிக்கையை கைவிட்டார். நாடோடி மன்னன் படத்தின் 100வது நாள் விழாவில் தனக்கு அளிக்கப்பட்ட தங்க வாளை, நிவாரண நிதிக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர்.
ஆனால், சோனியா காந்திக்கு இந்தப் பிரச்சனை குறித்து சரியான அணுகுமுறை இல்லை. ஒருவர் சொல்வதை அப்படியே வழிமொழிவது சிந்தனையாளர் செய்யும் செயல் அல்ல என்றார் வைகோ.