தேமுதிகவை விமர்சித்து வந்த கருணாநிதி இப்போது கூட்டணிக்குக் கூப்பிடுகிறார்-பண்ருட்டியார்
மதுரை: தேமுதிகவுக்கு 71வது இடம்தான் என்று பேசி வந்த முதல்வர் கருணாநிதி இப்போது முதல் ஆளாக எங்களை கூட்டணி குறித்துப் பேசக் கூப்பிடுகிறார் என்று கூறியுள்ளார் தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.
மதுரை வடக்குமாசி வீதி-மேலமாசி வீதி சந்திப்பில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
பெரும் திரளாக கூடிய தேமுதிகவினர் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.
கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், கேப்டனின் ஆணைக்கு இணங்க இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திவருகிறோம்.
மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெட்ரோலுக்கு 30 சதவிகிதம் வரி அதிகமாக இருக்கிறது. இதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் போராட்டத்தை அறிவித்த கருணாநிதி, ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் அந்த துறை அமைச்சரின் அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனையிட்டபோது போராட்டத்தை கைவிட்டவர்தான் இந்த கருணாநிதி.
இலங்கை பிரச்சனையில் அக்கறை இல்லாத ஆட்சி இந்த ஆட்சி.
அரசியல் கட்சிகளில் தேமுதிகவிற்கு 71வது இடம் என்று சொன்னவர் கருணாநிதி. ஆனால் இப்போது கூட்டணிக்காக முதலில் தேமுதிகவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் இரண்டாவது முறையாக ஜனாதிபதிக்கு போட்டியிட்டபோது எதிர்ப்புக் குரல் கொடுத்தவர் கருணாநிதி. செம்மொழி மாநாட்டிற்கும் அந்த தமிழரை அழைக்கவில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications