இலங்கைக்கு வெளியுறவுத்துறை உயர் அதிகாரி செல்வார்-பிரதமர் தகவல்
இலங்கையில் தமிழர் மறு குடியேற்ற நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. இன்னும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சொந்த ஊர்களில் குடியேறமுடியாமல் தவித்து வருகின்றனர். எனவே உண்மை நிலவரத்தை ஆராய்வதற்காக சிறப்புத் தூதரை அங்கு அனுப்பி உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பிரதமர் பதில் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் உயர் அதிகாரி ஒருவர் அங்கு செல்லவுள்ளதாக பிரதமரிடமிருந்து மீண்டும் முதல்வருக்குக் கடிதம் வந்துள்ளது.
அக்கடிதத்தில், கடந்த 17ம் தேதி தாங்கள் கடிதம் எழுதியதற்கு நன்றி. அதில் இலங்கையில் வடக்கு மற்றும் வடகிழக்கு மாகாண பகுதி மக்களின் மறுவாழ்வு மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தீர்கள். அதை பரிசீலித்தோம்.
மேலும் நீங்கள் தொடர்ந்து இந்த விவகாரத்தில் காட்டி வரும் அக்கறை மற்றும் முக்கியத்துவத்தால் நாங்கள் தீவிர கவனம் செலுத்துகிறோம். இதன்படி, வெளிவிவகாரத்துறையின் மூத்த அதிகாரியை விரைவில் இலங்கைக்கு அனுப்ப உள்ளோம்.
அவர், அங்குள்ள இந்திய தூதரக அதிகாரியுடன், தமிழர் நிலை குறித்தும், அவர்களை மறுகுடியமர்த்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் பேசுவார். வடக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.