நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் தாய்மொழியில் பதிலளிக்க விதிகளில் திருத்தம்- நாராயணசாமி
டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் தாய்மொழியில் பதிலளிக்க விதிகளில் திருத்தம் கொண்டுவரப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் குறித்து டெல்லியில் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இந்தக் குளிர்கால கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மத்திய அமைச்சர்கள் தங்ளது தாய்மொழியில் பதில் அளிக்கும் வகையில் நாடாளுமன்ற விதி முறைகளில் திருத்தம் கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. மொழிப் பிரச்சினை காரணமாக நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவித்து வந்த ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, தனது பதில்களை ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்கலாம் என சமீபத்தில் லோக்சபா சபாநாயகர் மீரா குமார் அனுமதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.