தினகரன் எரிப்பு வழக்கில் சிபிஐ அசமஞ்சம்-118 நாள் கழித்து அப்பீல் செய்த கொடுமை
மதுரை: மதுரையில் தினகரன் பத்திரிக்கை அலுவலகம் தீவைத்துக் கொளுத்தப்பட்டு, 3 பேர் அநியாயமாக எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், சிபிஐ மிக மிக மெத்தனமாக, இந்த வழக்கில் கீழ் கோர்ட்டில் தீர்ப்பு வெளியாகி 118 நாட்கள் கழித்து உயர்நீதிமன்றக் கிளையில் அப்பீல் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி, மதுரை மக்கள் மிகப் பெரிய கொடூரத்தை மெளன சாட்சியாக கண்ட கொடுமை நடந்தது. தினகரன் நாளிதழ், முதல்வர் கருணாநிதியின் வாரிசு யார் என்ற பெயரில் வெளியிட்ட ஒரு கருத்துக் கணிப்பைக் கண்டு கொதித்த ஒரு கும்பல், மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தை வெறித்தனமாக தாக்கினர்.
இதற்கு மு.க.அழகிரிதான் காரணம் என சன் டிவியில் தொடர்ந்து செய்தி ஒளிபரப்பப்பட்டது. அழகிரியை குண்டர் எனவும் அது வர்ணித்தது.
இந்த பயங்கர வன்முறைத் தாக்குதலில் அப்பாவிகளான, தினகரன் அலுவலக கம்ப்யூட்டர் லே-அவுட் பிரிவில் பணியாற்றிய கோபிநாத், வினோத்குமார் மற்றும் செக்யூரிட்டி முத்துராமலிங்கம் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கு குறித்து விசாரித்த மதுரை ஒத்தக்கடை போலீஸார், தி.மு.க-வின் தொண்டரணி அமைப்பாளராக இருந்த அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேர் மீதும், சம்பவம் நடந்தபோது தனது கடமையை செய்யத் தவறிய குற்றத்துக்காக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி-யாக இருந்த ராஜாராம் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியது. நெருக்கடி முற்றியதால் திமுக அரசு இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், 32 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். வழக்கில் மொத்தம் 85 பேர் சாட்சியமளித்தனர்.
சி.பி.ஐ. தரப்பில் வழக்கின் முக்கிய சாட்சியங்களாக தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியான படங்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், கடந்த 9.12.2009 அன்று குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்தது மதுரை செசன்ஸ் கோர்ட்.
இதையடுத்து உடனடியாக சிபிஐ உயர்நீதிமன்றக் கிளையில் அப்பீல் செய்திருக்க வேண்டும். அதாவது 90நாட்களுக்குள் அப்பீல் செய்யலாம். ஆனால் சிபிஐ அப்படிச் செய்யவில்லை.
இந்த நிலையில் மிக மிக காலதாமதமாக தீர்ப்பு வெளியாகி 118 நாட்கள் கடந்த நிலையில் நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அப்பீல் செய்தது சிபிஐ.
இதற்கான காரணத்தை, சிபிஐ இன்ஸ்பெக்டர் தனபாண்டி கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து நீதிபதி சொக்கலிங்கம் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக கூறி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications